கடவுளுக்கு வயதாகட்டும்
வருத்தங்களுடன் புறப்பட்ட பெண்ணின் பாடலில் இருந்த மலர் அசைந்தபடியே இருந்தது
தனக்குப் பிடித்தமானவர்களின் நிழலைச் சேமிக்கும் சிறுமி வெளிச்சமான உள்ளங்கை காட்டி அழைத்தாள் கரப்பான்பூச்சிகள் நகைச்சுவை வடிவம் மிக்கவை என்றாள்.
பெண்ணின் வருத்தங்களின் அருகில் கரப்பான்பூச்சி பற்றிய ஒரு சித்திரம் வந்ததும் மழை பற்றி அப்பாவியான எண்ணம் உடைய அவள் வருத்தங்களை அணிகலனாக மாற்றுவது குறித்து யோசித்தாள்.
முதலில் கண்களில் தொடங்கினாள் அந்தி சூரியனின் சாய்வை எடுத்து பூசினாள்
மனதை காகிதம் போல பரப்பினாள் பெயரில்லாத உயிர்களை நேசிப்பதாக எழுதினாள்
கூந்தலைக் களைத்தாள் சிங்கங்களின் இனச்சேர்க்கை பார்க்க ஆவல் கொண்டாள்
வளையல்கள் உடையும்படியாக இசைத்தாள் : அவளிடம் இருந்த பழம்பாடலைப் பாடினாள்.
மழை பெய்யாமல் போனால் ஏழைகளுக்குப் பதிலாக கடவுளுக்கு வயதாகட்டும்
~ உரக்க கத்தினாள்:சிரித்தாள்
நடந்தாள்
எல்லா பாதையிலும் அவளோடு உரையாட ஒரு சிறுமி நின்றுகொண்டிருந்தாள்