பூமியில் பெரும்பாலும் எல்லோரும் பழையவர்கள் காதலிக்கிற இரண்டு பேர் மட்டும் புதியவர்கள்.
என் பெயரைப் புதுமையாக உச்சரித்தபடி
இறந்தவர்கள் தன்னைப் பின்தொடர்கிறார்கள் என்றாள்.
கவலைப்படாதே நான் இறந்தவர்களுக்குத் தேவையான பொருட்களை விற்கிறேன் என்றேன்.
எப்போதும் போலன்றி உள்ளங்கை அளவு அதிகம் விரிந்திருந்தது வானம்
எப்போதும் போலன்றி முழங்கால் அளவு ஆழம் கூடியிருந்தது கடல்
எப்போதும் போலன்றி கண் சுருக்கும் அளவு ஒளி கூடி இருந்தது சூரிய சாய்வில்
கடவுளையும் காதலியையும் சமமாக நடத்துவதற்கு சிறந்த வழிமுறை கொஞ்சமாக மது அருந்துவதுதான்
அதிலும் காகங்களுக்கு என்று தயாரிக்கப்பட்ட மது என்றால் கொஞ்சம் பரவாயில்லை
அப்போதுதான் மரக்கிளையைப் பறவைகளின் நாற்காலி என்று சொல்லமுடியும்.
துப்பாக்கிச்சூடுகளைப் போல தீவிரமாக குரைக்கும் ஓநாய்களின் இயல்பு என் வயிற்றுக்கு எப்படி வந்தது?
காதலியிடம் கேட்டேன் : கொஞ்சம் மது அருந்தியிருந்தேன்.
பூனையின் கண்களை அதிஷ்ட கற்களாக பெற்ற அவள்
விதை நெல்லில் இருக்கும் நீரைப் பருகு என்றாள்.
எல்லா தாய்வழி கோபங்களும் நீங்கிவிட
நீண்டகாலமாக சிறுவனாக இருந்து
நான் முளைப்பதை நானே பார்த்தேன்
காதலில் இருந்து