தாத்தாவின் சொற்றொடர்கள்
அந்த வயதான மனிதனுக்கு அதிகபட்சம் ஐந்து வயதுதான் இருக்கும்”
இப்படி ஒரு தொடரை தாத்தா தினமும் சொல்லிவிடுவார்.
அப்போது கடவுளை விட அழகாக இருப்பார்.
நுணாமர நுகத்தடி போல இருக்கும் பாட்டி
பல் துலக்கி ~ வாயைத் துவைத்தது போல கொப்பளிப்பதாகக் கூறி தாத்தா சிரிப்பார்
அப்பாவும் அப்பபடி தாத்தா சொன்ன ஒரு வாக்கியத்திலிருந்துதான் பிறந்திருக்கிறார் அவ்வளவு சமநிலையின்மை இருக்கிறது அவர் இயல்பில்
தாத்தாவின் குடிசையில்
தொங்கும் குட்டித்தழைகளோடு ஒரு வெள்ளாட்டுக் குட்டியே கதவாகப் இருந்தது.
விரல்களை வைத்துக்கொண்டு உள்ளங்கையை விற்றுவிடு என எதிரே வந்தவரிடம் சொல்லிவிட்டு தாத்தா ஏர் கலப்பையோடு நடந்ததைதான் கடைசியாகப் பார்த்தேன்.
தாத்தா படுத்தப் படுக்கையாகிப் போன போதும்
அவர் உடலில் விளைச்சல் தரும் பகுதியாக வாய் மட்டும் இருந்தது.
இன்று காலை என் மனைவியிடம்
“நேற்று இரவு யாரோ என் தலையை இந்த உடம்பில் பொருத்திவிட்டு போனது போல உடல் அசதியாக இருக்கிறது” என்றேன்
அருகிலிருந்தவர்கள் வாயை மூடிய பிறகும் தலைமுடியாலும் சிரித்தார்கள்.
தாத்தா எனக்குச் சமீபத்தில் வசிக்க ஆரம்பித்திருப்பது போல உணர்ந்தேன்
இனிமேல்
ஒரு விண்மீனின் கடவுள் நான்,
சரி சரி.. நீங்களும் ஏதோ ஒரு விண்மீனின் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்.