காதலிக்காத பெண்ணுக்கு நிலவு ஒரு பழைய குடிசை

 

1.

அவள் உப்பு போன்றவள்

அவள் கண்கள் மிளகு போன்றவை

விரும்பியபடி இருக்கும்போது

அவள் நிழலில்

கண்டப்பேரண்டப் பறவையின் வலிமை இருக்கிறது

ஆனாலும்

ஆண்களின் பொய்களுக்கு எதிராக

அவள் இரண்டு மடங்கு உண்மையை சேகரிக்க வேண்டும்.

2.

அவள் உதடுகள் அழிஞ்சி பழம் போன்றவை

இளம் ஒஞ்சி உடைய அவளுக்கு

நிலவு ஒரு பழைய குடிசை

சிறு துளையை நகர்த்திக் கொண்டது போல உதடு குவித்து

அதைக் கூப்பிடுகிறாள்

அப்போது

கடவுளைப் போல இருப்பதற்கு அவளிடம் எல்லா காரணமும் இருக்கிறது.

ஆனாலும்

இறந்த மரம் நிற்பது போல

தங்கள் தேவை மீதே நிற்கும் ஆண்கள் அவளுக்கு முழுமையானவர்கள் இல்லை.

3.

யாருக்குத் தெரிந்தாலும் சிரித்து விடும்

ஒரு பாலியல் நகைச்சுவையை நினைத்து மெல்லியதாய் சிரிக்கிறாள்

அப்போது

அவள் ஆடையில் ஒட்டியுள்ள ஒட்டங்காய்ப்புல் கூட அழகாகத் தெரிகிறது

அவளது இரத்த ஓட்டத்தில் மகிழ்ச்சி ஒரு மீச்சிறு படகாக அசைகிறது

அதனால்

காதின் அணிகலன் காற்றில் அசைவதால் இசைக்கிறது

அதைக் கேட்க விரும்பினால் உங்கள் காதை மட்டும் நீட்டி அனுப்புங்கள்

ஆனாலும்

ஆண்களால் ஒரு பெண்ணை முழுதாக நேசிக்க முடியாது

ஏனெனில்

பெண்களோடு ஒப்பிடும்போது ஆண்களுக்கு

அரை இதயம்தான் இருக்கிறது.

 

முன்னாள் காதலியோடு பேசுவது அலுவலகக் கடிதம் போல இருக்கிறது

 

 

முன்னாள் காதலியோடு பேசுவது அலுவலகக் கடிதம் போல இருக்கிறது

 

எனக்குக் காதலிகள் இல்லை என்று சொன்னால்

யாரும் நம்புவதில்லை

இருப்பினும்

என் கடந்தகாலத்தில் மட்டும் இருக்கும் பெண்களைக் காதலிக்கிறேன்

வாழ்வு மறப்பதற்கு நிறைய அனுமதிக்கப்பட்டது,

இதில்

அன்பு ஒரு வகை மாமிசம்

அதை இறந்தவனைப் போல சாப்பிடலாம்.

முன்னாள் காதலியோடு பேசுவது அலுவலகக் கடிதம் போல இருக்கிறது

உரையாடுபவர்களை A மற்றும் B என குறியீடுகளாக மாற்ற வைக்கிறது

இதை விட அதிர்ச்சி எதுவென்றால்

இதயம் இயற்கைக்கு மாறாக இயங்கத் தெரியாத விலங்கு போல நடந்து கொள்வதுதான்.

 

 

திறப்பு

கண்களை இறுக மூடியிருக்கும் துறவி

வேறு யாராலும் திறக்க முடியாத அளவு

மெல்லியதாய்க் கண் திறந்து பார்த்துக்கொள்கிறார்

கேனி

நான் காகிதத்திலிருந்து பிறந்து வந்தேன் என்று
சொல்லித் திரியும் கேனி
ஒரு காகிதத்தை
அவளின் அம்மா என்று சொல்லிக்கொண்டு திரிகிறாள்
உற்றுப் பார்த்தால்
அக்காகிதம் இரண்டுபக்கமும் வெற்றுப் பக்கமாக இருக்கிறது.
காகிதத்தில் ஒரு பூட்டிய கதவு இருப்பதாகவும்
அதன் சாவியைத் தேடுவதாகவும் அடிக்கடி புலம்பியவள்,
இன்று
தினமும் அவளைப் பார்த்து
குலைத்துத் திரிந்த நாயை மடியில் வைத்திருக்கிறாள்
அவளிடம் காகிதம் எதுவும் இல்லை.
சாவிகள் உலோகத்தால் செய்யப்பட்டதாகவோக
உயிரற்றதாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லைதானே?

பியானோவை இசைக்கும் மழை

வெட்ட வெளியில் இருக்கும் பியானோ மீது
ஆலங்கட்டி மழை பெய்கிறது
மழையைக் கேட்டு இசையைப் பார்க்கும்
சிறுவன் கண்களில்
இரண்டு தொட்டி மீன்கள் இசைக்கின்றன.
எனவே
திறந்து இருக்கும் சவப்பெட்டியில் விழும் மழைத்துளிகளால்
சடங்குகளுக்குப் பிறகு இறந்தவன் எப்படியும் முளைத்துவிடுவான்


பேஸ்புக்கில் இரண்டு கவிஞர்கள்



நான் வேறு யாருமல்ல
வானில் பறக்கும்போது
குளத்தில் தெரியும் பறவைகளை உண்பவன்


நீயும் வேறு யாருமல்ல
குளத்துக்கு மேலே பறவைகள் எதுவும் பறக்காதிருக்க
காவல் காப்பவள் அவ்வளவே


நாம் போன பிறகு
பறவைகள் அதே குளத்தில் நீர் அருந்துகின்றன
நாம் நண்பர்கள் என்று நினைத்து.

தாத்தாவின் சொற்றொடர்கள்

தாத்தாவின் சொற்றொடர்கள்

 

அந்த வயதான மனிதனுக்கு அதிகபட்சம் ஐந்து வயதுதான் இருக்கும்”


இப்படி ஒரு தொடரை தாத்தா தினமும் சொல்லிவிடுவார்.


அப்போது கடவுளை விட அழகாக இருப்பார்.


நுணாமர நுகத்தடி போல இருக்கும் பாட்டி
பல் துலக்கி ~ வாயைத் துவைத்தது போல கொப்பளிப்பதாகக் கூறி தாத்தா சிரிப்பார்


அப்பாவும் அப்பபடி தாத்தா சொன்ன ஒரு வாக்கியத்திலிருந்துதான் பிறந்திருக்கிறார் அவ்வளவு சமநிலையின்மை இருக்கிறது அவர் இயல்பில்


தாத்தாவின் குடிசையில்
தொங்கும் குட்டித்தழைகளோடு ஒரு வெள்ளாட்டுக் குட்டியே கதவாகப் இருந்தது.


விரல்களை வைத்துக்கொண்டு உள்ளங்கையை விற்றுவிடு என எதிரே வந்தவரிடம் சொல்லிவிட்டு தாத்தா ஏர் கலப்பையோடு நடந்ததைதான் கடைசியாகப் பார்த்தேன்.


தாத்தா படுத்தப் படுக்கையாகிப் போன போதும்
அவர் உடலில் விளைச்சல் தரும் பகுதியாக வாய் மட்டும் இருந்தது.


இன்று காலை என் மனைவியிடம்
“நேற்று இரவு யாரோ என் தலையை இந்த உடம்பில் பொருத்திவிட்டு போனது போல உடல் அசதியாக இருக்கிறது” என்றேன்


அருகிலிருந்தவர்கள் வாயை மூடிய பிறகும் தலைமுடியாலும் சிரித்தார்கள்.


தாத்தா எனக்குச் சமீபத்தில் வசிக்க ஆரம்பித்திருப்பது போல உணர்ந்தேன்


இனிமேல்


ஒரு விண்மீனின் கடவுள் நான்,


சரி சரி.. நீங்களும் ஏதோ ஒரு விண்மீனின் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்.

ஒருவரை அதிகமாக காதலிப்பதால் விரைவில் வயதாகிவிடுகிறது

ஒருவரை அதிகமாக காதலிப்பதால் விரைவில் வயதாகிவிடுகிறது

அன்பே! உனக்கு போதுமான மனிதனாக இல்லாதற்கு வருந்துகிறேன்

என்னைப்பற்றிய புத்தகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பக்கங்களைப் படித்திருக்கிறாய்.

யாரைப்போலவோ நான் தோன்றக் கூடும் என்ற பயத்தில்

மீண்டும் மீண்டும் வந்தபோதும் உன் வீட்டின் கதவைத் தட்டாமல் அதன் மீது பின்வரும் பல குறிப்புகளை எழுதியிருக்கிறேன்


உப்பு நுனியிருக்கும் விரல்கள் உன்னுடையவை


கடுகு விதை போன்ற அழகான பெண் நீ


ஒரு தும்பியின் வாலை ஊசியாகக் கொண்டு ஆடை தைக்கும் பார்வையற்ற பெண் நீ


ஆமணக்கு இலை காம்பு குழலில் புகைப்பிடிக்கும் கிழவன் நான்


நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு அதிகமாக நேசிக்கிறோமோ, அவ்வளவு வயதாகிவிடுகிறது


நம் காதல் காகிதத்தில் செய்த வீடு அது அமைதியாக இருக்க காற்று நீண்ட நேரம் உதவாது.


குளிரை சந்திக்காத மேகம் மழை என்ற சொல்லை கற்பனை கூட செய்யாது


தண்ணீரின் மீது படுத்து தூங்கும்போது வரும் எல்லா கனவுகளும் பலித்துவிடும்
….
….
பிறகு நாம் திரிந்த தோட்டத்தின் எல்லா இடத்திலும் நின்றேன்

தோட்டத்தின் எல்லா காற்றையும் சேகரித்தேன்

அரை முட்டாள் போல அவற்றை அங்கேயே விட்டுவிட்டேன்


மேகங்களின் பின்னால் ஒளிந்துகொள்ளவும்

கற்களின் பின்னால் ஒளிந்துகொள்ளவும் தேர்ந்தவன் போல

செல்கிறேன் ~ மறைகிறேன்.

கடவுளுக்கு வயதாகட்டும்

கடவுளுக்கு வயதாகட்டும்

வருத்தங்களுடன் புறப்பட்ட பெண்ணின் பாடலில் இருந்த மலர் அசைந்தபடியே இருந்தது

தனக்குப் பிடித்தமானவர்களின் நிழலைச் சேமிக்கும் சிறுமி வெளிச்சமான உள்ளங்கை காட்டி அழைத்தாள் கரப்பான்பூச்சிகள் நகைச்சுவை வடிவம் மிக்கவை என்றாள்.

பெண்ணின் வருத்தங்களின் அருகில் கரப்பான்பூச்சி பற்றிய ஒரு சித்திரம் வந்ததும் மழை பற்றி அப்பாவியான எண்ணம் உடைய அவள் வருத்தங்களை அணிகலனாக மாற்றுவது குறித்து யோசித்தாள்.

முதலில் கண்களில் தொடங்கினாள் அந்தி சூரியனின் சாய்வை எடுத்து பூசினாள்

மனதை காகிதம் போல பரப்பினாள் பெயரில்லாத உயிர்களை நேசிப்பதாக எழுதினாள்

கூந்தலைக் களைத்தாள் சிங்கங்களின் இனச்சேர்க்கை பார்க்க ஆவல் கொண்டாள்

வளையல்கள் உடையும்படியாக இசைத்தாள் : அவளிடம் இருந்த பழம்பாடலைப் பாடினாள்.

மழை பெய்யாமல் போனால் ஏழைகளுக்குப் பதிலாக கடவுளுக்கு வயதாகட்டும்

~ உரக்க கத்தினாள்:சிரித்தாள்

நடந்தாள்

எல்லா பாதையிலும் அவளோடு உரையாட ஒரு சிறுமி நின்றுகொண்டிருந்தாள்

பூமியில் பெரும்பாலும் எல்லோரும் பழையவர்கள் காதலிக்கிற இரண்டு பேர் மட்டும் புதியவர்கள்.

பூமியில் பெரும்பாலும் எல்லோரும் பழையவர்கள் காதலிக்கிற இரண்டு பேர் மட்டும் புதியவர்கள்.



என் பெயரைப் புதுமையாக உச்சரித்தபடி

இறந்தவர்கள் தன்னைப் பின்தொடர்கிறார்கள் என்றாள்.


கவலைப்படாதே நான் இறந்தவர்களுக்குத் தேவையான பொருட்களை விற்கிறேன் என்றேன்.


எப்போதும் போலன்றி உள்ளங்கை அளவு அதிகம் விரிந்திருந்தது வானம்
எப்போதும் போலன்றி முழங்கால் அளவு ஆழம் கூடியிருந்தது கடல்
எப்போதும் போலன்றி கண் சுருக்கும் அளவு ஒளி கூடி இருந்தது சூரிய சாய்வில்


கடவுளையும் காதலியையும் சமமாக நடத்துவதற்கு சிறந்த வழிமுறை கொஞ்சமாக மது அருந்துவதுதான்


அதிலும் காகங்களுக்கு என்று தயாரிக்கப்பட்ட மது என்றால் கொஞ்சம் பரவாயில்லை


அப்போதுதான் மரக்கிளையைப் பறவைகளின் நாற்காலி என்று சொல்லமுடியும்.


துப்பாக்கிச்சூடுகளைப் போல தீவிரமாக குரைக்கும் ஓநாய்களின் இயல்பு என் வயிற்றுக்கு எப்படி வந்தது?
காதலியிடம் கேட்டேன் : கொஞ்சம் மது அருந்தியிருந்தேன்.


பூனையின் கண்களை அதிஷ்ட கற்களாக பெற்ற அவள்
விதை நெல்லில் இருக்கும் நீரைப் பருகு என்றாள்.


எல்லா தாய்வழி கோபங்களும் நீங்கிவிட

நீண்டகாலமாக சிறுவனாக இருந்து
நான் முளைப்பதை நானே பார்த்தேன்

காதலில் இருந்து

வாசகசாலையில் என் கவிதைகள்

அவரவர்_முகம்

அவரவர் முகம்

சதுரத்தின் மீது

ஒரு சிலுவை  விழுந்ததும்

உலகின் கருணை மிகுந்த செவ்வகங்கள் உருவாயின

ஒன்றில் தேவன்

ஒன்றில் சாத்தான்

மற்ற இரண்டிலும் குழந்தைகள் என நின்றார்கள்-

ஏதோ அளவெடுக்க வந்த கணக்கு ஆசிரியர்

சிலுவையை அருகிலிருந்த

வட்டத்தின் மீது நகர்த்தியதும்

அதிலிருந்து உருவான  விசிறிகளை  எடுத்து

நால்வரும் காற்று வீசினார்கள்

அப்போது,

அடுத்த சில மூச்சிற்குப் பிறகு

இறப்பவனைப் போல 

காற்று  திக்குமுக்காடியது

தேவனும் சாத்தானும் முறைத்தபடி இருந்தார்கள்

எங்களை முடிந்தால் பிடியுங்கள் என

செவ்வகங்களை மாட்டிக் கொண்டு ஓடிய சிறுவர்கள்

வீட்டுப் பாடம் எழுதிய   சிலேட்டுகளில்

ஆளுக்கொரு  உருவம் கிறுக்கியிருந்தார்கள்

வீடுவரை துரத்திவந்த  தேவனும் சாத்தானும்

இரண்டு உருவத்திலும் அவரவர் முகத்தையே கண்டார்கள்.

மனிதனை மீனாகவும் மீனை மனிதனாகவும் மாற்றுதல்

தண்ணீரில் விழுந்த அவனிடம்

 “நீயும் மீன் தான் ~  நீயும் மீன்தான் ”  என

பல முறை சொன்னபிறகுதான் நீந்தத் தொடங்கினான்

அவனை மீனென நம்பவைக்க

சுண்டு விரலைப் புழுவென காட்டி

கையை தூண்டில் போல வீச வேண்டி இருந்தது. 

நீந்தி கரையேறிய பிறகு

அவனை மனிதன் என்று நம்பவைக்க

பெரிய சிரமமேதும் படவில்லை

தள்ளிவிட்டது நான் தான் என்று சொன்னேன்

என்னைத் துரத்தியபடி மனிதனாகி விட்டான்.

மேலும் வாசிக்க…
https://www.vasagasalai.com/kavithaikal-poovithal-umesh/