தமிழ்க் கவிதைகளின் இன்றைய நிலை – 3


தலைப்புகளின் – காலம்

ஸ்காட்லாந்து நாட்டின் வரைபடத்தில் எங்கு தொடுகிறோமோ அந்த இடத்தை பற்றி ஒரு கவிஞர் எழுதிய கவிதையை படிக்கும் அளவுக்கு stanzapoetry என்ற இணைய இதழ் கவிதை வரைபடம்-( poetery map) என்ற புதுமையான முன்னெடுப்பை வழங்குகிறது, இதே போல pover poetery என்ற இணையதளமும் அமெரிக்க கவிஞர்களைக் வரைபடத்தில் காட்டுகிறது.
நிலம் சார்ந்த கவிதைகளை எழுதிய நம் முன்னோர்களும் அதை அவற்றின் அடிப்படையிலேயே வகைப்படுத்திய முன்னோர்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ் கவிதையில் புதுமையை செய்திருக்கிறார்கள்
ஆங்கில கவிதை உலகில் 1920களில் தான் எஸ்ரா பவுண்ட் அவர்கள் படிமம் என்ற இயக்கத்தை தொடங்குகிறார் ஆனால்அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உள்ளுறை இறைச்சி போன்ற உத்திகள் தமிழின் அகப்பாடல்களில் அதிகம் காணலாம்
மேற்கண்ட கருத்துகளைப் பொருத்திப் பார்க்கும்போது தமிழ் கவிதைகள் அடிப்படையில் காலம்தோறும் தனக்குள்ளேயே ஏதேனும் ஒரு புதுமையை உருவாக்கிக் கொண்டே வந்துள்ளது எனலாம்.
அதில் எதுகை மோனை என்று தொடங்கும் ஏழு நயங்கள் மட்டுமின்றி பாடலின் பொருளும் அது தரும் அழகுக்காகவும் செந்தொடை என்ற எட்டாவது நயத்தை அமைத்தனர். அதற்கு எடுத்துக்காட்டாக மிகவும் புகழ்பெற்ற பின்வரும் சங்கப் பாடலைக் குறிப்பிடலாம்

பூத்த வேங்கை வியன்சினை ஏறி
மயிலினம் அகவும் நாடன்
நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே

இன்றளவும்கூட சம கால தமிழ் கவிதைகள் இந்திய மொழிகளில் எழுதப்படும் மிகச்சிறந்த கவிதைகளாக விளங்குகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

அப்படி மிகச் சிறந்த கவிதைகளை எழுத இளம் எழுத்தாளர்களுடன் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இந்தப் பத்தியை எழுதுகிறேன்.

என்னுடைய முதல் கவிதை தொகுப்பான

வெயில் ஒளிந்துகொள்ளும் அழகி – நூல் குறித்த கருத்துக்களை நான் பலரிடம் கேட்டு அதில் உள்ள குறைபாடுகளை எப்படி களைவது என்றும் அறிந்து கொண்டேன் அவற்றோடு உங்கள் கவிதை எப்படி இருந்தால் கவனிக்கப்படும் என்பதைப் பற்றி நான் படித்து தெரிந்து கொண்ட செய்திகளை முதலில் பகிர்ந்து கொள்கிறேன்

கவிதைகளுக்கான தலைப்பைத் தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள்-
சமீபத்தில் வெளிவந்து சிறந்த கவிதைத் தொகுப்புகள் ஆக பேசப்பட்ட நூல்களில் நீளமான, புதுமையான தலைப்புகள் வைப்பது அந்தக் கவிதையை படிப்பதற்கான ஆவலையும் தூண்டுதலையும் எடுத்த எடுப்பிலேயே தருவதாக அமைகின்றன. எழுதியிருக்கும் கவிதையிலிருந்து ஒரு வரியை தேர்ந்தெடுத்தல் அல்லது ஒரே சொல்லில் ஒரு தலைப்பை வைப்பது போன்ற வழக்கமான நடைமுறைகளை மாற்ற முயற்சி செய்யலாம்,
இதற்கு உதாரணமாக Puschcart விருது பெற்ற ஒரு கவிதையின் தலைப்பையும் எனக்குப் பிடித்தமான ஆங்கில கவிதை நூலில் உள்ள ஒரு கவிதையின் தலைப்பையும் உங்களுக்கு தர விரும்புகிறேன்

“To the Man on the Bus Who Told Me to Go Back to Where I Came From ” – By Gavin Gao

“ Poem to be found among my possession following the occasion of my sudden disappearance and analysed for clues as to where I may have gone and why” –

_ இந்தக் கவிதை இடம்பெற்ற நூலைப் பற்றியும் நூல் ஆசிரியரைப் பற்றியும் வேறு ஒரு தனித்த பதிவு எழுதலாம் என்று இருக்கிறேன்.

தமிழிலும் இதுபோன்ற கவரும் வகையிலான தலைப்புகள் பல நூல்களில் இடம்பெற்றுள்ளன. அதற்கு உதாரணமாக சமீபகாலங்களில் நான் வாசித்த நூல்களில் இருந்து சில தலைப்புகளை கீழே கொடுத்துள்ளேன் இதில் பல நூல்களில் உள்ள கவிதை தலைப்புகள் விடுபட்டிருக்கலாம்,

எனக்கு பிடித்த பெண்கள் எல்லோரும் ஆபாசத்துக்கு எதிரானவர்கள்
200 ஆம் ஆண்டை ஒரு சாண்ட்விச் தலைமுறைக்காரன் பார்க்கிறான்- சித்துராஜ் பொன்ராஜ்

சோகை பீடித்த அன்றாடத்தை விட்டு வெளியேற கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணுக்குஅறிவுரை என்றால் திறக்கும் ஆண் வாய் அத்தனை பெரியது – பெருந்தேவி

எவ்வளவு பலம் கொண்டு ஊதியும் அதிகாரத்தின் மயிர் அசையாதது கண்டபின் ஒவ்வொரு மயிராக சுட துவங்கி விட்டவன்
தங்கவேல் முத்துவேல் ஞானவேல் வடிவேல்- இசை

ஒரு மரத்தை நம் வழிக்குக் கொண்டுவர
பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் – இளங்கோ கிருஷ்ணன்

உலகத்தின்அத்தனை மகிழ்ச்சியான சொற்களாலும் எழுதப்பட்ட துயரம்
பறவைகள் குறித்த கவிதை உவமையை யாரும் புரிந்துகொள்ளவில்லை தட்சனே – வெய்யில்

லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கிழங்கு-மௌனன் யாத்ரீகா

சர்ரியலிசத்தனமான ஒரு பெண் முலை
டக்…டக்…டக்… டக்… டக்… -நரன்

வாரத்தின் எட்டாவது நாளில் வந்த கனவு குறிப்பு
காதலிகளை டம்ளராக மாற்றிக் குடிப்பவன்
மீன்களை மனிதர்கள் போல யோசிப்பதை விட்டுவிடுங்கள் – பூவிதழ் உமேஷ்

நடுஇரவில் கரைந்து அழும் பூனைகளுக்கு- ஷங்கர்ராம சுப்ரமணியன்

கொஞ்சம் சுகவீனமும் சில மருந்து துணுக்குகளும் – கனிமொழி – ஜி

பிறை நிலவிலிருந்து மேகம் புடவையாக வீழ்வது- தேன்மொழி தாஸ்

உன் ஞாபகத்துக்கு நாக்கு கொஞ்சம் நீளம்தான்
செம் புலத்து மாயோன் பொக்லைன் தேரில் பவனி- ஸ்டாலின் சரவணன்

முகமற்ற காற்றாடிகளின் டார்வின் கோட்பாடு
நனைந்த ஆடைகளை மழை நினைப்பதில்லை- பெரு. விஷ்ணுகுமார்

ஐந்து அப்பங்களும் இரு மீன்களும் ஒரு சிலுவையும்
வெட்டுக்கிளியை சூப்பர் மேக்ஸ் பிளேடுக்கு பழக்குதல் – கதிர்பாரதி

ஒரு பன்றியை வளர்ப்பதன் பின்னணியில் உள்ள இறையாண்மை எனும் கெட்ட வார்த்தை
தலைவன்தலைவி செய்ய தேவையான பொருட்கள் – ராம் சந்தோஷ்

இரண்டு ஒன்று மூன்றாக நடனமாடுபவர்கள் – துரை

குதிரை முடியால் கொலை செய்யும் பெண்- நேசமித்திரன்

ஒரு செங்கொடி ஊர்வலம் சாலையை கடந்த பிறகு- ஸ்ரீசங்கர்

அதிகம் பயன்படுத்தப்பட்ட காலுறை என நாறும் ஒரு முத்தம்- சபரிநாதன்

சற்றே மேடான மூலையில் ஒடுங்கிய படி இரவைக் கழித்தல்- இயற்கை
சின்னஞ்சிறியசந்தோஷங்கள் இருண்ட காலத்தில் வாழ்கின்றன – வே.நி.சூர்யா

நூலகத்தின்இருண்ட அறை புத்தகத்தின் பக்கங்களில் இருந்து- வேதாநாயக்

பியானோ என்பது ஒரு நீண்ட சவப்பெட்டி- சுபா செந்தில்குமார்

அவரது படுக்கையில் இருக்கும் ஒரு இறந்த மனிதருக்கு- சமயவேல் மொழிப்பெயர்ப்பு

கண்ணே நீ தான் உலகின் அன்றலர்ந்த அணிகலன்
என் சாவுக்கான இடம் டாட் காம் – அனுராதா ஆனந்த் மொழிபெயர்ப்பு

நூல் முழுவதும் எல்லாக் கவிதைகளுக்கும் ஒரே தலைப்போடு வரிசை எண் கொடுக்கப்பட்டு இருப்பதும் ஒரு முறையாக உள்ளது உதாரணம்
கோமாளிகளின் நரகம் கவிதைக்காரன் இளங்கோ

சில கவிதைகளுக்கு எண்களால் குறியீடுகளால் எழுத்துக்களால் தலைப்புகளை தருவதும் உண்டு
நாம்இதுவரை அறிந்திருந்த புகழ்பெற்ற வரிகளையே தலைப்புகளாககொண்ட கவிதைகளும் உண்டு உதாரணம்
உண்ண நாழி உடுக்க இரண்டு – யவனிகா ஸ்ரீராம்

இவ்வாறு அமையாமல் ஒரு தொகுப்பு முழுவதும் எவ்வித கவிதை தலைப்பு அமையாமலும் தொகுப்புகள் வெளிவந்துள்ளன உதாரணம்
சிறிய எண்கள் உறங்கும் அறை போகன் சங்கர்
உலர் இலை பக்கங்கள்- எஸ். சண்முகம்

எனவே ஒரு கவிதையின் தலைப்பு அந்த கவிதைக்கான நுழைவாயிலாக இருப்பது மட்டுமல்லாமல் வாசகனை ஈர்க்கும் ஒரு உத்தியாகும் இன்றைய கவிதைகளில் பார்க்கப்படுகிறது
இனி வரும் பதிவுகளில் கவிதையில் இடம்பெறும் சமகால கூறுகள் ஒவ்வொன்றைப் பற்றியும் பார்க்கலாம். வாசிப்பவர்கள் தவறாமல் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.

வட்டத்திலிருந்து சதுரமாக வெளிவருதல்

வட்டத்திலிருந்து சதுரமாக வெளிவருதல்

1.
பார்வையற்றவருக்கு ஐந்தறிவுதானா ?
தொல்காப்பியரின் வீட்டு மேல் மாடியில் குடியிருப்பவர் விவாதிக்கிறார்
தொல்காப்பியர் வீட்டு பூச்செடியின் 1610 பூக்களில் 1516 வது பூ அசைகிறது

2.
261 குறிஞ்சிப் பூக்களின் நீலம் பூசிய
கபிலரின் வீட்டுச் சுவரில் எச்சமிட்ட பறவை
235 கிரகணம் வீசும் சூரியனை விட்டு பறக்கிறது
3.
திருவள்ளுவரின் பக்கத்து வீட்டில் செத்தவனை
ஓர் அலாரம் எழுப்புகிறது
மணி: 9.26.

4.
வாய்த் தகராறில் தூக்கிட்டு இறந்தவளின்
பதினோராம் நாள் காரியத்திற்கு வந்த M. கலாஸ் நிக்கோவிடம்
“வாய் தான் உலகின் முதல் துப்பாக்கி”
350 மீ தூரத்தில் நின்று சொல்லுகிறான் இறந்தவளின் கணவன்

5.
பிரார்த்தனையில் விருப்பமில்லாதவன்
தூரம் என்ற கண்ணுக்குத் தெரியாத இடம் வரை
பிரார்த்தனையை அனுப்புவதற்கு பதிலாக
செடிகளுக்கு நீர் ஊற்றுகிறான் வாளி – சாய்ந்து நிமிரும் போது,
கடவுளின் விக்கல் சத்தத்தைக் கவனிக்காமல்

6.
இரவு – பகல் காலியான கருப்பு பெயிண்ட் டப்பா
பகலை மீண்டும் நிரப்ப உலகில் யாராவது ஒருவர்
கனவு கண்டால் போதும் என்ற ஃபிராய்டை
Non 24 தூக்க வியாதிக்காரன் துரத்துகிறான்.

7.
பேருந்தில் தாயின் தோள் மீது சாய்ந்தபடி
சிரித்த குழந்தையைப் பார்த்து சிரித்தவன்
அது அழும் போது
தனக்கு ஏன் அழுகை வரவில்லையென யோசித்து
இறங்க வேண்டிய நிறுத்தம் கடந்து இறங்குகிறான்

8.
ஒரு நாளை மேற்கண்டவாறு
கண்டபடி பிரித்தப் பிறகு
அடுத்த நாளை வேகமாக வர வைப்பது யார்

9.
இரவின் சுவை திகட்டிவிட்டது என்று
புரண்டு படுக்கும் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்

தமிழ்க் கவிதைகளின் இன்றைய நிலை – 2

தமிழ்க் கவிதைகளின் இன்றைய நிலை -2

“தமிழை பொறுத்தவரை கவிதை என்பது தானாக வளரும் காடு”
என்று தமிழின் மூத்த கவிஞர் சமயவேல் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
காட்டில் புலிகளோ யானைகளோ இருந்தால் அந்தக் காட்டின் பரப்பும் வளமும் எளிதில் குறைந்து விடாதபடி அவை பார்த்துக் கொள்ளும் என்று சுற்றுச்சூழல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக புலிகள் இருக்கும் எல்லா காடுகளும் ( Tiger reserves ) அதன் வழியே ஓடும் ஆறுகளின் நீர் ஆதாரத்தை ஆண்டிற்கு 30 சதவீதத்திற்கு மேல் அதிகப்படுத்தி அருகில் உள்ள நகரங்களில் நீர் தேவையை பூர்த்தி செய்வதாக ஒரு ஆய்வு சொல்கிறது

தமிழ் கவிதை என்ற காட்டில் அப்படிப்பட்ட புலிகளும் யானைகளும் இல்லாமல் போய்விட்டது. தமிழ்க் கவிதை என்னும் காடு தனது பரப்பை தனது வளங்களை சுருக்கிக் கொண்டு வந்துள்ளது என்ற ஐயம் எனக்கு வலுவாக எழுந்துள்ளது.

என்னுடைய கவிதைத் தொகுப்பைப் பற்றி கருத்து சொல்ல என் நண்பரிடம் கேட்டிருந்தேன். நண்பர் சாதகங்களைச் சொல்லி விட்டு தன்னிடம் மாறுபட்ட கருத்து உள்ளதாகவும் அதைச் சொல்லலாமா என்று தயக்கத்துடன் கேட்டார். ஏன் இப்படி சொல்றீங்க என்று நான் கேட்டதும், “எதிர்மறையாக கருத்துச் சொன்னால் பலபேர் அதன்பிறகு நேரில் பார்த்தால் கூட பேசுவதில்லை கருத்து சொல்பவர்களை எதிரியாக பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்” என்று பதில் சொன்னார்.

இந்த மன ஓட்டம் உருவானதற்கு காரணம் எங்குத் தொடங்கியது? கவிதை நூல் குறித்து பேச நூல்வெளியீட்டு விழாவிற்கு அல்லது நூல் அறிமுக விழாவிற்கு அழைக்கப்பட்ட மரியாதைக்காக அந்த புத்தகத்தை பற்றி பாராட்டி பேசுவது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான் ஆனால் பாராட்டுவதற்கு பதிலாக வானளாவப் புகழ்ந்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் .

சமீபத்தில் 70 க்கும் குறைவான கவிதை அடங்கிய ஒரு கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் 10க்கும் மேற்பட்டவர்கள் அந்த கவிதை தொகுப்பைப் பாராட்டி பேசினார்கள் இல்லை இல்லை புகழ்ந்து பேசினார்கள் பேசியவர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு அதை வாங்கிப் படித்தால் அது புதுமையோ நுட்பமோ இல்லாமல் சராசரியான கவிதைகளோடு அந்தப் புகழ்ச்சிக்கு சற்றும் அருகில் செல்லாத கவிதைகளுமே இருக்கின்றன.

அப்படி தமிழில் கவிதை முகமாக அழைக்கப்படுபவர்கள் பேசிய பேச்சுகள் அந்த கவிஞர்களின் தலையில் கிரீடங்களை வைத்துவிடுகிறது . அதனால் அந்த தொகுப்பைப் பற்றி யாராவது எதிர்மறையாக பேசினால் வாழ்நாள் முழுமைக்குமான எதிரிகளாக உருவாக்கி விடுகிறார்கள். அதனால்

ஏன் வம்பு என்று கவிதையின் புதுமை தரம் மேன்மை உத்தி முயற்சி போன்ற கூறுகளின் உண்மை தன்மையை பேசாமல் போனதால் என்ன நடக்கிறது என்றால் தன்னுடைய முந்தைய தொகுப்லிருந்து எந்த மாற்றமும் வளர்ச்சியும் இல்லாமல் அதே போல இன்னொரு தொகுப்பை வெளியிட தயாராகி விடுகிறார்கள். இது இத்தோடு நின்றுவிடுவதில்லை அதைப் போலவே எழுதும் இன்னொரு கவிஞர் அல்லது அந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்தவர் நாம் மட்டும் அதற்கு என்ன குறைந்தவரா என்று அதே தொனியோடு ஒரு கவிதைத் தொகுப்பை கொண்டுவருகிறார்.

குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகைநாடி- என்ற அளவுகோல் தமிழ் கவிதை நூல்களைப் பற்றி பேசுபவர்களிடம் இல்லாமல் மறைந்து போய்விட்டது என்றே சொல்லலாம்.

இந்தச்சூழலை மாற்றுவதற்கு இரண்டு கருத்துக்கள் பயன்படும் என்று நினைக்கிறேன்

  1. புதியதாக கவிதை எழுதுபவர்கள் அல்லது தங்களுடைய கன்னி முயற்சியாக கவிதை நூல் வெளியிட்டவர்கள் மூத்த கவிஞர்களிடம் கருத்து கேட்க வாய்ப்பு அமையும்போது
  2. என்னுடைய கவிதைகளில் என்னென்ன குறைகள் உள்ளன ?
  3. அதை மேம்படுத்திக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?
  4. நான் அவசியம் படிக்க வேண்டிய சமகால கவிதை புத்தகங்கள் என்று எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள்?
  5. கவிதை இயல் சார்ந்து அறிந்து கொள்ள இனிமேல் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் என்ன என்ன ?
  6. கவிதை குறித்து தெரிந்துகொள்ள யாருடைய இணையப் பக்கங்களை தொடர வேண்டும்?
  7. எந்த இலக்கிய இதழ்களை வாங்கி படிக்க வேண்டும்?
  8. கவிதை நூல் குறித்த சரியான பார்வையை தெரிந்து கொள்ள யாருடைய யூ ட்யூப் உரைகளைக் கேட்க வேண்டும்?
  9. கடந்தஆண்டில் விருது பெற்ற நூல் களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

போன்ற முக்கியமான கேள்விகளைக் கேட்டு குறைந்தது சில கேள்விகளுக்காவது பதில்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் இது போன்று கருத்து கேட்கிறேன் என்ற பெயரில் அவர்களை தொல்லை படுத்தக் கூடாது இதுதான் புதியவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான கருத்து.

பொருளாதார வாய்ப்புள்ளவர்கள் மூத்த கவிஞர்கள் தங்கள் கவிதை நூல்களை படித்து கருத்து சொல்வதற்காக கட்டணம் செலுத்தலாம். இதை நான் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன் ஏனெனில் நேரம் என்பது விலை மதிக்க முடியாதது.

சிலருடைய கவிதை நூல் வெளியீட்டு விழாக்களுக்கு செலவிடும் தொகையை ஒப்பிடும்போது இது ஒன்றும் பெரியதாக இருக்காது என்று நினைக்கிறேன்.

2.கவிதை நூலைப் பற்றி பேசுகின்ற இலக்கிய விமர்சகர்கள் மூத்த கவிஞர்கள் சமகால கவிஞர்கள் அனைவரும் வெளிப்படையாக பேசுவதற்கு முன் வரவேண்டும்
சமகால கவிதை பரப்பில் உருவாகிவரும் மாற்றங்களில் குறைந்தபட்சம் ஒரு சிலவற்றையாவது பகிர்ந்து கொண்டு அதை நோக்கி செல்ல வேண்டும் என்று சுட்டிக்காட்ட வேண்டும்.
பொருட்படுத்தத் தக்கதாக இல்லை எனில் கடுமையாக நிராகரிக்க வேண்டும்

மேலும் பேசுவோம்….

மனைவியை ஒயின் பாட்டிலில் வைத்துவிட்டவன்

மனைவியை ஒயின் பாட்டிலில் வைத்துவிட்டவன்

நான் உங்களைப் போல் இல்லை
எனக்கு பிடிக்காதவர்களை பார்க்கப் போகும்போது
இதயத்தை வீட்டிலேயே வைத்துவிடுவேன்

சொன்னால் நம்ப மாட்டீர்கள்
நேற்று மாலை தோழியை முத்தமிட்டு திரும்பும்போது
நாக்கு இல்லாமல் திரும்பினேன்
எதுவும் பேசாததால்
அம்மா ஹெட்போனில் பாட்டு கேட்பதாக நினைத்து கொண்டார்
என் நல்ல நேரம் M.A.C Retro Matte லிப்ஸ்டிக் பூசிய முத்தத்தில்
காலையில் திருப்பித் தந்தாள்
வாரம் முழுவதும் பெறும் முத்தங்களை
லிப்ஸ்டிக் நிறமாகவோ வாசனையாகவோ கணக்கு வைத்துக் கொள்வேன்
எனக்கு L’Oreal Paris Colour Matte பிடிக்கும்

நேரத்தை நினைவை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள
சட்டையில் இரண்டு பாக்கெட் தைக்கப் போயிருந்தேன்
தையலர் தன் மனைவியை முன்பு எப்போதோ
வைன் பாட்டிலில் வைத்துவிட்டதாக எடுக்கப் போயிருந்தார்

இப்போதெல்லாம் நினைவுகளையும் உறவுகளையும் உறுப்புகளையும்
வைத்துவிட்ட இடம் தெரியாமல் தேடுவது இயல்பாகிவிட்டது.

தமிழ்க் கவிதையின் இன்றைய நிலை-1

தமிழ்க் கவிதைகளின் இன்றைய_நிலை

1.கவிதை புத்தகங்கள்பிரசுரம் செய்வதற்கு பெரும்பாலான பதிப்பகங்கள் தயங்குகின்றன.

  1. நாவல் சிறுகதைகள் போன்றவற்றிற்கான பிரசுர வாய்ப்பு பரவலாகி உள்ளது. இந்த இரண்டுகருத்துக்களை ஒட்டி கவிதைகளுக்கான இடம் ஏன் சுருங்கிப் போனது என்பதை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.
    கடந்த வாரம் தமிழின் மிக முக்கிய பதிப்பகமான யாவரும் பதிப்பகத்தின், #யாவரும்.காம் மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது, அதில் இணைய இதழுக்கு சிறுகதைகள் கட்டுரைகள் (மட்டுமே) அனுப்ப கேட்டிருந்த செய்தியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை, ( அவர்கள் கவிதையைப் புறக்கணிக்கிறார்கள் என்று சொல்லவில்லை) கவிதை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாத நிலைக்கு வந்துவிட்டதா என்று எண்ணத் தோன்றியது.
    தமிழ் கவிதை வாசகர்களும் சமகால தமிழ் கவிதையின் ஊடாக செயல்பட்டு கொண்டிருப்பவர்களும் கவிஞர்களும் இதை ஒரு முக்கிய இலக்கிய போக்கிற்கான தொடக்கமாக கருதவேண்டியுள்ளது. இப்போது மேற்கண்ட இரண்டு கருத்துகளையும் இதனோடு பொருத்திப் பார்த்தால் கவிதை சார்ந்த ஒரு கருத்தோட்டத்தை இன்று நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
    You talk me in riddles
    I will answer you in rhymes
    I love you for a little
    I will you love for all time

( #Sea_of_strangers- By #Long_leav)
குறுகிய அளவிலான எளிய கவிதைகள் மூலம் அதிகப்படியான வெகுஜன வாசக பரப்பை பெற்ற லாங் லீவ் எழுதிய மேற்கண்ட கவிதை புத்தகம் ( Lallaby also) அதிகப்படியாக ஆங்கிலத்தில் விற்பனை ஆனாலும் பெரும்பாலான மேலை நாட்டு அறிஞர்கள் அது போன்ற கவிதைகளை எழுதாமல் மிகுந்த தீவிரத் தன்மையுடன் எழுதி வருகின்றனர் ,
மேலை நாடுகளில் கவிதையை அடுத்த தலைமுறை இடம் கொண்டு செல்வதற்கு அங்கே பல்வேறு வகையான திட்டமிடல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதுவும் பள்ளி அளவிலிருந்து இளம் கவிஞர்களை அடையாளம் காணும் முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்குஅதுபோன்றவேலைகளை செய்ய வேண்டியது மிக முக்கியமான தேவையாக படுகிறது.

நாவல்களும்சிறுகதைகளும் கவிதை புத்தகங்களை விட அதிகமாக வாங்க படுவதாக சொல்லப்படும் கருத்துகளில் உண்மை இல்லாமலும் இல்லை குறிப்பாக மொழிபெயர்ப்பு நாவல்கள் சிறுகதைகள் முன்பு எப்போதையும் விட அதிக அளவில் விற்பனையாகும் கருத்துக்கள் சொல்லப் படுகிறது.

இதைப்பற்றி தொடர்ந்து அதிகப்படியாக நாவல்களையும் சிறுகதைகளையும் வாசிக்கும் என் நண்பர்களிடம் விசாரித்தபோது நாவல்களில் இப்போது பல்வேறு வகையான சோதனை முயற்சிகளும் கதைகளும் நிலப்பரப்புகளும்தமிழ் வாசகர்களுக்கு அதிகப்படியாக தேவைப்படுவதாக அவர் கூறினார் அதனால் அத்தகைய புள்ளிகளை தொடும் நூல்கள் விற்பனை ஆவதாக மேலும் கூறினார். 
அது எனக்கு சரி என்று பட்டதாக தோன்றியது ஏனெனில் நாவல் சிறுகதைகளில் தமிழ் இலக்கிய வாசக மனம் எத்தகைய புதிய கோணங்களையும் களங்களையும் தேடும் மனநிலையில் இருக்கிறதோ அதைப் போலவே கவிதையிலும் அத்தகைய புதிய மொழியையும் களத்தையும் தேடும் மனம் வெளிவரும் கவிதை புத்தகங்களை ஒன்றிரண்டை தவிர மற்றதை வாங்கிப் பார்த்து சலிப்படைந்து விடுகிறது. 

இதைப்பற்றி கவிதை எழுதாமல் தொடர்ந்து கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கும் என் நண்பனிடம் கேட்டபோது அட்டைகளை எடுத்துவிட்டால் பெரும்பாலான கவிஞர்கள் புத்தகம் ஒரே மாதிரியாக இருப்பதாக சொன்னார். அதுமட்டுமில்லாமல் கவிதைகளில் ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் தனக்கென்று ஒரு சட்டங்களை வைத்துக் கொண்டு ஒரே மாதிரியாக சலிக்காமல் எழுதுவதாகவும் அதை படிக்கும்போது நூலின் முடிவு வரை ஆர்வம் தொடர்பு இல்லை என்றும் சொன்னார். 

நாவல் கவிதை சார்ந்து மேற்கண்ட இரண்டு நண்பர்களின் கருத்துக்களை ஒருசேர சேர்த்து பார்க்கும்போது முதலில் குறிப்பிட்ட இரண்டு கருத்துக்களுக்கும் வலு சேர்ப்பதாக அமைவதாக #நான் எண்ணிக்கொண்டேன்.

எனவே தமிழ் கவிதை சூழலில் இயங்கும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் இதை ஒரு முக்கிய செய்தியாக எடுத்துக்கொண்டு தங்கள் கவிதை மன நிலையை மேலும் மேம்படுத்திக் கொண்டு புதிய வகை களையும் களங்களையும் சோதனைகளையும் கவிதை வெளிகளையும் மொழி அமைப்புகளையும் புதுமையானதாகவும் ரசிக்கும்படியாகவும் அனைவரையும் கவரும் படியாகவும் முன்வர வேண்டும். அப்படி செய்தால்தான் தமிழ் கவிதை உலகம் சார்ந்து தற்போது உருவாகியிருக்கும் ஒரு தேக்கம் உடைபடும்.

தொடரும் …

கவிதை எனப்படுவது…

கவிதை ~ கவிதை இயல் சார்ந்து ஒரு கருத்து பரிமாற்றம் உருவாக்குவதற்காக இன்று முதல் ஒரு வலைப்பக்கம் தொடங்குகிறேன்

“make it new” என்று எஸ்ரா பவுண்ட் தேடியது போல கவிதை சார்ந்து பின்வரும் செய்திகள் இடம்பெறும்.

கவிதைகளையும் கவிதை சார்ந்து என் கருத்துக்களையும் மற்றவர் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ள உள்ளேன்.


அது மட்டுமின்றி,


கவிதைசார்ந்த புதிய உரையாடல்களை தொடங்குவது


புதிய கவிதை போக்குகள்


சாப் புக் ( Chap book ) போன்றவற்றிற்கான வெளி


புதிய வடிவம், முயற்சி,தேடல், தொனி, மொழி,வெளி, களம் உள்ளடங்கிய கவிதைகள் .


ஆங்கிலக் கவிதைகள்~ நூல்கள்.


மொழிபெயர்ப்பு கவிதைகள்~ புதியதாக மொழிபெயர்க்கப்படும் கவிதைகள்


தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்படும் கவிதைகள்.


ஒரு கவிதைக்கான விமர்சனங்கள்


கவிதை நூல்கள் சார்ந்த விமர்சனங்கள்


கவிதை இயல் சார்ந்த கட்டுரைகள்.


பழைய கேள்விகளுக்கான புதிய பதில்களையும், புதிய கேள்விகளுக்கான பழைய பதில்களையும் தேடுவது


இத்தளம் தனி மனிதர் சார்ந்த எந்த முன் முடிவும் இல்லாமல் படைப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கும்.


கவிதை, கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
poetpoovithal@gmail.com