கவிதை கவனிக்கும் கலையில் பயிற்றுவிக்கிறது.


கவிதையின் உண்மையான மதிப்பு உடனடியாக உணரக் கூடிய தனிப்பட்ட நன்மைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலம். ஆனால் நம்முடைய உடனடி சூழ்நிலைகளுக்கு அப்பால் வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பதற்கான ஒரு வழி கவிதை . அப்படி சிந்திப்பதற்கு வாய்ப்பு அமையும் நாள் மிக அழகானது .

ஒரு கவிதை நம்மை எப்படி கவர்கிறது – கவிதையை ரசிப்பதற்கு தயாராக இருக்கும்போது அது எளிதாக நடக்கிறது. இயல்பிலேயே இரசனை சார்ந்துதான் நான் கவிதைகளைப் படிக்கிறேன் அதிலும் எளிமை உருவாக்கும் அழகு எந்த பேருருவாளும் உருவாக்க முடியாது என்று நினைப்பேன்.
கவிதையில் அமையப்பெறும் உரையாடல் தன்மை எனக்கு வெகுவாகப் பிடிக்கும்,

“நான் கண்ணீரை எடுத்துவைத்தேன்
அது மழையை எடுத்து வைத்தது “

  • அப்துல் ரகுமானின் இந்த வரிகள் உள்ள “போட்டி” என்ற கவிதையைப் பல முறை படித்து ரொம்ப ரசித்திருக்கிறேன் , இந்த ரசனை எனக்கு எங்கிருந்து வந்தது என்றால் கிராமங்களில் கூலி வேலை செய்பவர்கள் அலுப்பு தெரியாமல் இருக்க எதிர்பாட்டு பாடுவதை, விடுகதை போடுவதை அருகிருந்து கேட்டு வளர்ந்ததால் இது மிக நெருக்கமாகிவிட்டது. அப்படியான ஒரு தன்மையுள்ள ஒரு கவிதைதான் நான் மிகவும் ரசித்தது.

கடற்கன்னியும் சில கடற்பறவைகளும் பாடுவதுபோல புனைவை அழகான கவிதையாக சித்துராஜ் பொன்ராஜ் எழுதியிருக்கிறார். அதில் தொழிற்படும் வடிவமே முதலில் எனக்குப் பிடித்தது.
கடற்கன்னி பாடுவதைப் பெரிய பத்தியாகவும் பறவைகள் பாடுவதை சிறிய பத்தியாகவும் அமைத்துள்ள விதம் கடற்கன்னி மற்றும் பறவைகளின் உருவ ஒப்பீடு போல எனக்கு முதலில் தோன்றியது பிறகு கவிதை நடக்கும் இடம் கடற் புறம் என்பதால் அலைகளின் உயர்வு தாழ்வு (அகடு – முகடு) போல பத்திகளின் அமைப்பு இருப்பதாகவும் பட்டது.
முதலில் இருக்கும் கடற்கன்னியின் பாடல் வெயிலில் தொடங்கி நிழலோடு முடிகிறது இந்த முரண் இத்தோடு முடிவதில்லை உள்ளுக்குள்ளே பல படிநிலைகளில் தொடர்ந்து வருகிறது. இக்கவிதை உருவமின்மையை தொடர்ந்து முன்னெடுக்கிறது அதன் தொடக்கமாக உருவமில்லாத வெயில் அமைகிறது.

இரண்டாவது பத்தியில் கடல் பறவைகள் பாடுகின்றன – அதில் கடலுக்கு நெய்தல் என்ற பெயர் எப்படி வந்தது என்ற புனைவு மிக அற்புதமாக உள்ளது. அது கடலுக்கு உருவமில்லை என்று முடிகிறது.

மீண்டும் கடற்கன்னி பாடுகிறாள் கடல் மல்லாந்து கிடக்கும் பிரகாசமான கண்ணாடி என்ற உவமை மிக அழகானது அதில் முகம் பார்ப்பது யார்? அதன் எதிரொளி எங்கு செல்கிறது என்பதற்கான பதில் இன்மை என்பதாகிறது .ஒருவேளை வானம் என்றால் அதற்கும் உருவமில்லை. மேலும் இது முதல் பாட்டில் உள்ள பிரகாசமான வெயில் என்பதன் தொடர்ச்சியாக இருக்கிறது .
கடலுக்கு உருவம் இல்லை என்பதைப் பறவைகளை ஒட்டி கடற்கன்னியும் வழிமொழிகிறாள் ஆனால் ஒரு படி மேலே சென்று கடலை திணை மறுவிய வெற்றிடமான ஒரு மாய நிலம் என்று முடிக்கிறாள் இப்போது வாசிப்பவருக்கு கடற்பறவைகள் என்ன பாடும் என்ற ஏக்கம் ஏற்படுகிறது.

தன்பாட்டில் மனிதர்களை ஏற்றிவைத்த கடற்கன்னிக்குப் பதில் தருவது போல் பறவைகள்,
“மனிதர்கள் காற்றிலேறி வருவார்கள்
கவனம் கவனம்
காற்றும் திணை இல்லாத இடம்”
என்று புதிய பதிலைத் தருகிறது . இது கடற்கண்ணி கடலை திணை மறுவிய நிலம் என்று கூறியதற்குப் பதிலாக அமைகிறது.

பறவைகள் இப்படி பாடியதைக் கேட்ட கடற்கன்னி பறவைகள் எச்சரித்த மனிதர்களைத் திணை மறந்து தன்னிடம் வர வைப்பதற்காக கடலின் மூச்சைத் திணற வைக்கும் கர்ப்பத்தை உருவாக்கப் போவதாக சொல்கிறாள்
முறையில் திரிந்த நிலத்தைப் பாலை என்று சொல்வது போல கடலுக்குள் பயன்படாமல் இருக்கும் மலைகளையும் பாசிகளையும் உடைய நீர் நிலத்தைப் பாலை என்று சொல்லுகிறாள். இறுதியாக கடலை போதாமை என்று சொல்லி ஆசையை ஒப்பிடுகிறாள்.
இறுதியாக பறவைகள் பாடுகின்றன,
“கடலை மனிதர்கள் தூக்கிக் கொண்டு போகிறார்கள்
கவனம் கவனம்”
இந்த உரையாடல் இத்தோடு முடிந்து விட்டதா என்றால் இல்லை அது தொடரும் அதைத் தொடர யார் வேண்டுமானாலும் வரலாம் இந்தக் கவிதையை வாசிக்கும் நீங்களாகவும் இருக்கலாம் நானாகவும் இருக்கலாம்.

கடற்கன்னியும் சில கடற்பறவைகளும

சித்துராஜ் பொன்ராஜ்

கடற்கன்னி பாடுகிறாள்:

இதோ பிரகாசமான வெயில்:
கழுத்தின் பின்புறமாய்த் தூக்குக் கயிற்றின் கனத்தோடும் அசௌகரியத்தோடும் புரள்கிறது.

கடலின் கர்ப்பத்தை என்னுடன் இழுத்து வந்து போட்டதுபோல்
பொன்னிறமான மணலில் சிதறிக் கிடக்கும் நுரைகளின் மத்தியில் கிடக்கிறேன்.

நுரைகளைப்போலவே கடலின் கர்ப்பமும் அரூபமானது.

கடல் நிழல்களோடு கூடித் திளைக்கும் சூரியக் கிரணங்களால் சூலுற்றுத் தன் கர்ப்பத்தைத் தானே யுக யுகாந்திரமாய்க் கலைத்துக் கொண்டிருக்கிறாள்.

கடற்பறவைகள் பாடுகின்றன:

நெய்வாசக் குழலுடைய ஒரு பெண் ஆயிரமாயிரம் மனிதர்களின்
காலடிகள் தட்டிப்போட்ட மணற்பரப்பில் அமர்ந்தபடியே கருநீல நிறத்தில்
பாடல்களை நெய்து கொண்டிருக்கிறாள்.

மனிதர்கள் வெவ்வேறு சமயங்களில் நெய்த பாடல்களே கடல்.

அதனால் கடலைச் சார்ந்திருக்கும் பகுதியும்
நெய்தல் என்று அழைக்கபடுகிறது.

கடலுக்கு உருவமில்லை.

கடற்கன்னி பாடுகிறாள்:

கடல், மல்லாந்து கிடக்கும் பிரகாசமான கண்ணாடி.

அதற்கு உருவமில்லை.

அதன் உருவமின்மையின் மீதுதான் மனிதர்கள்
ஆழமான பெருமூச்சுகளின் ஓசையோடு
சலித்துத் திரும்பும் பாய்மரக் கப்பல்களின் வடிவத்தில்
தங்கள் போதை மிகுந்த ஆசைகளை ஏற்றி வைக்கிறார்கள்.

இந்தப் போதாமை எனக்கு வருத்தம் தருகிறது.

கடல், திணை மருவி வெறும் வெற்றிடமாகிப் போன மாய நிலம்.

கடற்பறவைகள் பாடுகின்றன:

மனிதர்கள் காற்றிலும் ஏறி வருவார்கள்.
கவனம்! கவனம்!
காற்றும் திணை இல்லாத இடம்.

கடற்கன்னி பாடுகிறாள்:

இடுப்புக்கு மேலே மனிதர்களின் உடம்பும்,
கீழே மீனின் வாலும் உடைய சந்ததியை உருவாக்கப் போகிறேன்.
கடலின் மூச்சுத் திணற வைக்கும் கர்ப்பத்தை
எனக்குச் சாதகமாக்கிக் கொண்டு.

ஒரு நாள் மூச்சுத் திணறி மனிதர்கள்
திணைகளைத் துறந்து என்னிடம் வரப் போகிறார்கள்.

இதோ கடலுக்கடியில் மலைகள்,
பவளங்கள் வளர்ந்திருக்கும் காடுகள்,
வயல் வரப்புகளாய் விரிந்திருக்கும் வாசனையுள்ள மண்,
நொடிக்கொரு தரம் இருப்பிடமின்றி
அலைந்து கொண்டிருக்கும் பாலை.

இது, கடல்.

இதுவே போதாமை.
அதனால் இதனை ஆசைக்கு உவமையாய்ச் சொல்கிறார்கள்.

கடற்பறவைகள் பாடுகின்றன:

கடலை மனிதர்கள் தூக்கிக் கொண்டு போகிறார்கள்
கவனம்! கவனம்!

எதிர்காலத்தில் இதுவே உங்கள் பாடலாய் இருக்கப் போகிறது.//

நன்றி: யாவரும்.காம்

சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள் சிங்கப்பூரில் வசிக்கிறார். தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் சிறுகதைகள் எழுதி வருகிறார். பாரதியார் போல பதினொரு மொழிகள் தெரிந்தவர் . ரஷ்ய மொழியில் இருந்தும் ஸ்பானிஸ் மொழியில் இருந்தும்இவர் மொழிபெயர்த்த கவிதைகள், கதைகள் விரைவில் தனிநூலாக வர உள்ளன. இதுவரை மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதை தொகுப்புகள், மூன்று கவிதை தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. விரைவில் இவருடைய ஆங்கில கவிதை தொகுப்பும் ஆங்கில மொழியில் சிறுகதைத் தொகுப்பும் வெளிவர உள்ளன. இவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு இத்தாலியின் ஆவது சுலபம், ( அகநி ) இவருடைய மரயானை நாவல் (வம்சி) பரவலான கவனம் பெற்றுள்ளன.

அவருடைய வலைப்பக்கம்

https://sithurajponraj.net/

.

.

Leave a comment