Lexotan 12 ம்~ காந்தியாரும்
மனநல மருத்துவர் என்னிடம் கேட்டார்:
உங்கள் மூளையில் இருக்கும் அனைத்தையும் சொல்லுங்கள்.
நான் கஷ்டப்பட்டேன்~
நான் அமைதியாக இருந்தேன்.
அவர் மீண்டும் கேட்டார்:
நீங்கள் இப்போது என்ன நினைக்கிறீர்?
பிரதமரின் உடை அலங்காரத்தை நினைத்துக் கொண்டிருக்கும் போது
திடீரென காந்தியிடமிருந்த
காகா கலேல்கரின் கைத்தடி ஞாபகம் வந்தது
அமைதியாக இருந்தேன்
அடுத்து கேட்டார்:
எதைப் பற்றி கவலைப்படுகிறீர்?
இந்திய நகரங்களின் பழைய பெயர்களுக்கும் எனக்குமான தூரம் குறித்து கவலைப்படுகிறேன் என்பதை மறைத்தேன்
இரண்டு நதிகளுக்கு இடையேயான குறைந்த தூரம் கண்ணீர் வழியும் இரு விழிகளுக்கு இடையேயானது என்றேன்.
அவர் உத்திரபிரதேசத்தில் வீடுகளை இடித்த JCB போல மூச்சு விட்டார்.
எனக்குக் குழப்பமாக இருந்தது.
கண்களை மூடும் போது உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவரை ஒருவேளை கண்டுபிடிக்கலாம் என்றார்.
கண்களை மூடினேன்
கல்கத்தாவின் ஒரு தெருவில்
காந்தியின் ஒரு துளி கண்ணீர் உலர்ந்த ஓர் இலையின் மீது விழுந்தது**
மருத்துவர் சொன்னார்:
இந்த ஆண்டிலும் நம்மால் எதுவும் செய்ய முடியாத இரண்டு நாட்கள் உள்ளன:
நேற்று மற்றும் நாளை*
காந்தியின் குரல் அவருக்கு எப்படி வந்தது?
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது
தெளிவு மெல்ல கூடியது
காந்தி ஒரு பாதி மனநல மருத்துவர் என்று
கண் விழித்து நிமிர்ந்தேன்.
எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே வாழ்க்கை இருக்கிறது* என்று எழுதிய
சுவர் நாட்காட்டி தொங்கியது
மருத்துவர் தந்த
மருந்து சீட்டைப் பார்த்தேன்
Tab -Lexotan 12
காந்தி என்று எழுதி இருந்தது.
******
*****
* காந்தியடிகள் எழுதியவை
** 14.8.1947 அன்று நவகாளி யாத்திரையில் நடந்தது.
