ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழா



இந்திய மொழிகளுக்கான கொண்டாட்டமாகத் கருதப்படும் ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழா கடந்த வியாழன் அன்று  நோபல் விருது பெற்ற எழுத்தாளர் அப்துல் ரசாக் குரானா அவர்களின்  தொடக்க உரையுடன் தொடங்கியது. எதிர்ப்பின் ஒரு வடிவமாக எழுதுதல் என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.
அதில் எழுதுவது என்பது மறதி, கவனச்சிதறல், புறக்கணிப்பு, நமக்குத் தெரிந்ததையும், நாம் நினைவில் வைத்திருப்பதையும் கடந்துபோக வைப்பதற்கான எதிர்ப்பின் வடிவமாக இருக்கிறது என்று அவர் பேசியுள்ளார்.

இவ்விழாவில் 21 இந்திய  மற்றும் 14 சர்வதேச மொழிகளைச் சேர்ந்த 350 எழுத்தாளர்களும் கவிஞர்களும் பங்கு கொண்டு ஐந்து அமர்வுகளில் உரை நிகழ்த்துகிறார்கள். 

நாளை மறுநாள் ஜனவரி 23ஆம் தேதி இந்த இலக்கியத் திருவிழா நிறைவு பெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற கவிஞருக்கு வழங்கப்படும் கவிதைக்கான மகாகவி கண்ணையாலால் சேத்தியா விருது இந்த ஆண்டு  மலையாள கவிஞர் கே.சச்சிதானந்தன் அவர்கள் பெறுகிறார். மலையாளத்திலிருந்து அவருடைய கவிதைகளும் தமிழில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மனித ராசியின் தாய்மொழி கவிதை. அது மொழிகளுக்கு அப்பாலிருக்கும் மொழி. அது எல்லோருக்கும் சொந்தமானதுதான். மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும்கூட என்று சொல்லவே விரும்புகிறேன். ஏனெனில், கவிதையினூடாகப் பேசுவது மனிதர்கள் மட்டுமல்ல. அசைவதும் அசையாததுமான பிரபஞ்சம் முழுவதும்தான்.

– சச்சிதானந்தன்

அவருடைய   இரண்டு கவிதைகள்.

தமிழில் சுகுமாரன்

நினைவில் காடுள்ள மிருகம்

“நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதாகப் பழக்க முடியாது.
அதன் தோலில் காட்டுச் சதுப்பு நிலங்களின் குளிர்ச்சி.
அதன் மயிர்க்கால்களில் காட்டுப்பூக்களின் உக்கிரவாசனை.
அதன் கண்மணிகளில் பாறைகளில் வழுக்கிவிழும் காட்டுச் சூரியன்.
அதன் வாயில் காட்டாறுகள் கர்ஜிக்கின்றன.
அதன் நாவில் காட்டுத்தேன் எரிகின்றது.
அதன் செவிகளில் அடவிகளின் மேகங்கள் முழங்குகின்றன. அதன் இரத்தத்தில் காட்டானைகள் பிளிறுகின்றன.
அதன் இதயத்தில் காட்டு நிலாக்கள் பூக்கின்றன.
அதன் சிந்தனைகள் காட்டுப்
பாதைகளில் குதித்தோடுகின்றன.
நினைவில் காடுள்ள மிருகத்தை
எளிதாகப் பழக்க முடியாது.
என் நினைவில் காடுகள் உள்ளன”

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
கரியும் எண்ணெய்ப் பிசுக்கும் கலந்த அவளது பகலை
சொர்க்கத்து மகரந்தம் சுவாசிக்கின்ற
வானம்பாடியாக மாற்றுவது,
இரவில் அத்தளர்ந்த சிறகுகளுக்கு ஓய்வு தர
தோள் குனிந்து கொடுக்கும்
தளிர் அடர் மரமாக மாறுவதாகும்.

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
காற்றும் மழையும் நிறைந்த கடலில்
மேகங்களின் கீழே புதியதோர் பூமியைத் தேடி
காலம் செலுத்துதல் என்று பொருள்.
நமக்குச் சொந்தமான வீட்டு வாசலில்
முளைத்த ஒரு மலர்ச்செடியை
யாரும் இதுவரை கண்டிராத கடற்கரையில்
கொண்டுபோய் நட்டுவளர்த்தல் என்று பொருள்.

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
தன் தசைநார்களின் ஆற்றல் முழுவதையும்
ஒரு சௌகந்திகப் பூவின் மென்மைக்குக்
கைமாற்றம் செய்து கொள்வதாகும்.
மணிமுடியும் ராணுவ உடையும் கழற்றியெறிந்து
மற்றொரு வானம் கடந்து
மற்றொரு வீட்டிலுள்ள
காற்றிற்கும், மற்றொரு நீருக்கும்
தன் தசையை விட்டுக்கொடுப்பதாகும்.

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
அவளுடைய பழமையான காயங்களிலிருந்து
சூரிய கிரணம் போல் ஒரு வாளை உருவாக்க
அவளுக்கு உதவுவதாகும்.
பின்னர் இரத்தம் வடிந்து தீரும் வரை
அக்காயத்தில் நம் இதயத்தை அழுத்திக் கிடப்பதாகும்.
நான் ஒரு பெண்ணையும் காதலித்ததில்லை.

Leave a comment