குழந்தையின் கையிலிருக்கும் செரலாக்கைத் தொட்டு நக்கத் துடிக்கும் தந்தையின் நாக்கு



#தண்ணீரின்_சிரிப்பு

ஸுரோவ்ஸ் அஃபோரிஸம் (தமிழில் கணேஷ்ராம் மொழிபெயர்த்து நூல்வனம் வெளியீடாக வந்தது) என்ற ஃபிரான்ஸ் காஃப்காவின் நுண்கவிதைகள் படித்தபோது நான் முதலில் ஏங்கியது, நேரடித் தமிழில் இப்படி ஒரு தொகுப்பு வருமா என்றெண்ணினேன்.

அதன் பின், பாதசாரி ஐயாவின் “ஆழ்ந்தவின்ற சான்று” ஓரளவுக்கு அஃபோரிஸத்துக்கு நெருக்கமான புத்தகமாக எனக்குத் தோன்றியது.

அஃபோரிஸம் என்றால் என்ன? உலகின் பல்வேறு தத்துவங்களை பல்வேறு அறிஞர்கள் ஏற்கனவே கட்டமைத்து அவற்றைப் பற்றி எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதி குவித்திருக்கிறார்கள். அதை மீறியத் தனி மனித கண்டடைவுகளை கவிஞனின் மனநிலையுடன் அணுகி, அதன் சக்கையை உதறி சாறை மட்டும் பருகத் தருதல். குறும்பாக்களாக மாறிவிடக் கூடிய எல்லா அடையாளமும் கொண்டவை அஃபோரிஸ கவிதைகள்.

பூவிதழ் உமேஷ் அவர்களின் “தண்ணீரின் சிரிப்பு” பற்றி முதலில் கேள்வி பட்டபோது அத்தொகுப்பை “தமிழின் முதல் அஃபோரிஸ கவிதை நூல்” என்ற அறிவிப்பு ஈர்த்தது. படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. குழந்தையின் கையிலிருக்கும் செரலாக்கைத் தொட்டு நக்கத் துடிக்கும் தந்தையின் நாவைப் போல் எச்சிலூறியது.

அதேநேரம், பூவிதழ் உமேஷ் மற்றும் தாமரைபாரதி அவர்களுடன் அப்போது நிகழ்ந்த ஒரு ஃபோஸ் புக் உரையாடலில், திருக்குறள் இருக்கும் போது இதெப்படி தமிழின் முதல் அஃபோரிச நூலாக முடியும் என்ற ஒரு நல்ல விவாதம் நிகழ்ந்தது. அது பல புரிதல்களை ஏற்படுத்தியது. ஆனால், கண்டிப்பாக இந்நூல் அஃபோரிஸ கவிதை வெளிக்கான ஒரு மிகச்சிறந்த கதவைத் திறந்து விட்டிருப்பதாகவே எனக்கு இப்போது இந்நூலை வாசித்த பின் தோன்றுகிறது.

நூலின் சாராம்சமென்று சொல்ல வேண்டுமென்றால், பார்ப்பவற்றிலிருந்து உணர்ந்தவற்றைப் பிடித்து தன் மொழி ஆளுமையைத் தூரிகையாக்கிப் பட்டாம்பூச்சிக்கு வண்ணமடிப்பதைப் போன்று அழகாக படைத்திருக்கிறார். பல கவிதைகளில் பட்டாம்பூச்சிகள் உயிர் பெற்று படபடக்கிறது. அதை நாம் உணர்ந்து நம் மனம் படபடக்கவும் செய்கிறது. அதுவே நூல் ஆசிரியரின் வெற்றியென்று எனக்குப் படுகிறது.

சிலவற்றை நீக்கிவிட்டு, இன்னும் கொஞ்ச காலம் அவற்றில் இன்னும் ஒட்டியிருக்கும் சில சக்கைகளை மட்டும் நீக்கி மற்றொரு அஃபோரிஸ நூலில் நம்மிடம் கொடுத்திருக்கலாம் என்றும் தோன்றியது.

உதாரணத்துக்கு சில அஃபோரிஸ கவிதைகளை இங்கேப் பகிர்ந்து முடித்துக் கொள்ளலாம்தான். ஆனால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமென்று எளிதில் விலக்கி வைத்து விட முடியாத பல அழகான பலாச்சுளைகள் நிறைந்த பழுத்த பலாவாக இருக்கும் இப்புத்தகத்தைப் பற்றி சொல்ல அந்த ஒரு கவிதையை மட்டும் பகிரவே எனக்கு சற்று தயக்கமாக இருக்கிறது. ஆனாலும், ஒன்றே ஒன்று…

*******
அவசர காலத்தில் வெளியேறும்போது
கதவு அதிக பயன்மிக்கதாக மாறுவது போல
சில மனிதர்கள் இருக்கிறார்கள்.
*******
நன்றி!
– கவிஞர் குமரகுரு

Leave a comment