3 கவிதைகள்

தாத்தாவின்  செய்தித்தாள்

தாத்தாவுக்கு

காலை உணவுக்குப் பின் தினமும்

நாளிதழ்களில் வரும்

கண்ணீர் அஞ்சலி விளம்பரங்களைப் படிக்கும் பழக்கம் உண்டு

பரீட்சைக்கு படிப்பது போல்

மீண்டும் மீண்டும் அவற்றைக் படித்து முடிக்கிறார்

அவரது பெயரின் முன் பகுதியோ பின் பகுதியோ

எழுதப்படவில்லை என்பதை உணரும் போது

ஒரு பெருமூச்சு விடுவார்

கடைசியாக

செய்தித்தாளை மடித்து வைத்து விட்டு

அமைதியாக யோசிப்பார்

ஒரு வேப்பம்பூவோ புளியம்பூவோ அல்லது ஒரு பழுத்த இலையோ

அதன் மீது விழுந்ததும்

அவரும் அஞ்சலி செலுத்தியது போல

எழுந்து நடப்பார்.

 

விளையாட்டு

நான் என் மகன்களுடன்

பார்வையற்ற மனிதனின் கோழியாக நடிக்கிறேன் 

இந்த பாத்திரத்திற்கு

நான் சரியாக பொருந்துகிறேன் என்று

எனக்குத் தெரியும்

இது

மறக்க முடியாத விளையாட்டு.

இரண்டு பெண்கள்

தண்ணீருக்கு என்று ஒரு கல்லறை உள்ளது அது மேகம்.

அங்கிருக்கும் புற்களில் என் ஆட்டுக் குட்டிகளை மேய்ப்பதற்கு விரும்புகிறேன்.

பீச் வாலிபால் விளையாடும் பெண்களைப் போல அவற்றை அங்கு குதித்து விழுந்து விளையாட விடுவேன்.

இமைக்க வழியின்றி இளம் பெண்ணின் மார்பு போல மேலிருந்து பூமியைப் பார்ப்பேன்.

நானும் ஆட்டுக் குட்டிகளும் பூமிக்குத் திரும்பி வந்ததும் செடிகொடிகளிடம் இந்தச் சுற்றுலா பற்றி பேசிக் கொள்வோம்.

குழந்தையின் கையிலிருக்கும் செரலாக்கைத் தொட்டு நக்கத் துடிக்கும் தந்தையின் நாக்கு



#தண்ணீரின்_சிரிப்பு

ஸுரோவ்ஸ் அஃபோரிஸம் (தமிழில் கணேஷ்ராம் மொழிபெயர்த்து நூல்வனம் வெளியீடாக வந்தது) என்ற ஃபிரான்ஸ் காஃப்காவின் நுண்கவிதைகள் படித்தபோது நான் முதலில் ஏங்கியது, நேரடித் தமிழில் இப்படி ஒரு தொகுப்பு வருமா என்றெண்ணினேன்.

அதன் பின், பாதசாரி ஐயாவின் “ஆழ்ந்தவின்ற சான்று” ஓரளவுக்கு அஃபோரிஸத்துக்கு நெருக்கமான புத்தகமாக எனக்குத் தோன்றியது.

அஃபோரிஸம் என்றால் என்ன? உலகின் பல்வேறு தத்துவங்களை பல்வேறு அறிஞர்கள் ஏற்கனவே கட்டமைத்து அவற்றைப் பற்றி எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதி குவித்திருக்கிறார்கள். அதை மீறியத் தனி மனித கண்டடைவுகளை கவிஞனின் மனநிலையுடன் அணுகி, அதன் சக்கையை உதறி சாறை மட்டும் பருகத் தருதல். குறும்பாக்களாக மாறிவிடக் கூடிய எல்லா அடையாளமும் கொண்டவை அஃபோரிஸ கவிதைகள்.

பூவிதழ் உமேஷ் அவர்களின் “தண்ணீரின் சிரிப்பு” பற்றி முதலில் கேள்வி பட்டபோது அத்தொகுப்பை “தமிழின் முதல் அஃபோரிஸ கவிதை நூல்” என்ற அறிவிப்பு ஈர்த்தது. படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. குழந்தையின் கையிலிருக்கும் செரலாக்கைத் தொட்டு நக்கத் துடிக்கும் தந்தையின் நாவைப் போல் எச்சிலூறியது.

அதேநேரம், பூவிதழ் உமேஷ் மற்றும் தாமரைபாரதி அவர்களுடன் அப்போது நிகழ்ந்த ஒரு ஃபோஸ் புக் உரையாடலில், திருக்குறள் இருக்கும் போது இதெப்படி தமிழின் முதல் அஃபோரிச நூலாக முடியும் என்ற ஒரு நல்ல விவாதம் நிகழ்ந்தது. அது பல புரிதல்களை ஏற்படுத்தியது. ஆனால், கண்டிப்பாக இந்நூல் அஃபோரிஸ கவிதை வெளிக்கான ஒரு மிகச்சிறந்த கதவைத் திறந்து விட்டிருப்பதாகவே எனக்கு இப்போது இந்நூலை வாசித்த பின் தோன்றுகிறது.

நூலின் சாராம்சமென்று சொல்ல வேண்டுமென்றால், பார்ப்பவற்றிலிருந்து உணர்ந்தவற்றைப் பிடித்து தன் மொழி ஆளுமையைத் தூரிகையாக்கிப் பட்டாம்பூச்சிக்கு வண்ணமடிப்பதைப் போன்று அழகாக படைத்திருக்கிறார். பல கவிதைகளில் பட்டாம்பூச்சிகள் உயிர் பெற்று படபடக்கிறது. அதை நாம் உணர்ந்து நம் மனம் படபடக்கவும் செய்கிறது. அதுவே நூல் ஆசிரியரின் வெற்றியென்று எனக்குப் படுகிறது.

சிலவற்றை நீக்கிவிட்டு, இன்னும் கொஞ்ச காலம் அவற்றில் இன்னும் ஒட்டியிருக்கும் சில சக்கைகளை மட்டும் நீக்கி மற்றொரு அஃபோரிஸ நூலில் நம்மிடம் கொடுத்திருக்கலாம் என்றும் தோன்றியது.

உதாரணத்துக்கு சில அஃபோரிஸ கவிதைகளை இங்கேப் பகிர்ந்து முடித்துக் கொள்ளலாம்தான். ஆனால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமென்று எளிதில் விலக்கி வைத்து விட முடியாத பல அழகான பலாச்சுளைகள் நிறைந்த பழுத்த பலாவாக இருக்கும் இப்புத்தகத்தைப் பற்றி சொல்ல அந்த ஒரு கவிதையை மட்டும் பகிரவே எனக்கு சற்று தயக்கமாக இருக்கிறது. ஆனாலும், ஒன்றே ஒன்று…

*******
அவசர காலத்தில் வெளியேறும்போது
கதவு அதிக பயன்மிக்கதாக மாறுவது போல
சில மனிதர்கள் இருக்கிறார்கள்.
*******
நன்றி!
– கவிஞர் குமரகுரு

கடவுளின் இருப்பை அனுபவிக்கிற பரவசம் -கவிஞர் கரிகாலன்

எழுதுதல் என்பதே புதுமை செயல்பாடுதான்.
தமிழ் போன்ற கனிந்த மொழியில் எழுதுவோருக்குப் புதுமை செய்யும் வேட்கை அதிகம். அது வள்ளுவன் தொடங்கி பூவிதழ் உமேஷ் வரையான தமிழக் கவிகளுக்கு இருப்பதில் ஆச்சரியமில்லை. சமீபகாலமாக நான் படித்த கவிகளுள் அதிகம் புதுமை செய்பவராக பூவிதழ் உமேஷ் விளங்குகிறார்.
சமீபத்தில் தமிழில் aphorism வகையில் அமைந்த கவிதைகளை பூவிதழ் உமேஷ் முயன்றிருக்கிறார். ஓர் உண்மையை அறிவார்ந்த முறையில் வெளிப்படுத்தும் சிறு தொடரையே aphorism என்கிறோம். மருத்துவ உண்மைகளைச் சுருக்கமாக எழுதிய ஹிப்போகிரேட்டஸின் வடிவமாக அஃபோரிசத்தை இலக்கிய விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். கிட்டத்தட்ட இதே காலக்கட்டதில் எழுதப்பட்ட திருக்குறளையும் aphorism வகைமையில் சேர்க்கலாம்.

aphorism என்பதை பழமொழி, பொன்மொழி, ஞானமொழி, மணிமொழி இப்படி பல்வேறு வகைகளில் சொல்லலாம். அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தும் கலையிது. கனிந்த ஞானத்திலிருந்து விளையும் கவிவகை.
பூவிதழ் உமேஷூக்கு இளம் வயதில் இந்த ஞானம் சித்தித்திருக்கிறது. சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்டவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள். அவற்றுள் ஒன்று பழமொழி நானூறு. எழுதியவர் முன்றுரை அரையனார். சமண முனிவர். வள்ளுவர் சமயம் கடந்தவர். வள்ளுவத்தில் பௌத்தம் சமணம் விரவிக்கிடக்கிறது. உமேஷும் வள்ளுவரின், முன்றுரை அரையனின் தொடர்ச்சிதான்.

aphorism போலவே மேலும் சில வடிவங்கள் இருக்கின்றன. Adage, Proverb, Idiom, Quote, epigram போன்றவை அவை. இவை aphorism போன்ற மயக்கத்தை உருவாக்குபவை. நாட்டார் வழக்கில் கையாளப்படும் பழமொழிகளையொத்தவை Adage, Proverb போன்ற வடிவங்கள் . Idiom மரபுத்தொடர். நேரடியாக அர்தத்தத்தை வழங்காமல் தொடர்புடைய வேறு பொருளை வழங்குபவை. உதாரணமாக kill two birds with one stone என்கிற Idiom ஒரே கல்லில் இரண்டு பறவைகளைக் கொல்வதைக் குறிப்பதல்ல. ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை முடிப்பது! epigram என்பதோ ஒரு வேடிக்கையான திருப்பம். ஒரு நையாண்டி அறிக்கை. கிண்டல் அல்லது நையாண்டி. ஒரு அஃபோரிசம் எபிகிராமை உள்ளடக்கியிருக்கலாம். அதேவேளை எபிகிராம், அஃபோரிசம் ஆகிவிடாது.
ஆகவேதான் Viking Book of Aphorisms என்றொரு நூலில் W.H ஆடன் அஃபோரிசத்தை ‘பிரபுத்துவ எழுத்து வகைமை’ என்கிறார். மேற்கண்டவற்றிற்கான இடைவெளிகளை விளங்கிக் கொண்டால் அஃபோரிசம் வகைமையின் முக்கியத்துவத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

உமேஷின் அஃபோரிச கவிதைகள் எந்த அளவுக்கு புதிதாக, மலர்ச்சியாக, இருக்கிறதோ அதே அளவு திருக்குறள், பழமொழி போன்ற பழந்தமிழ் இலக்கியங்களின் தொடர்ச்சியாகவும் இருக்கிறது. அஃபோரிச வடிவத்துக்கே உரித்தான தத்துவச் செருக்கோடும் அங்கதத் தன்மையோடும் இவை மிளிர்கின்றன.
A woman wihout a man is like a fish without a bicycle. இரினா டன்னின் இக்கூற்றும் ஒரு விதத்தில் aphorism தான். ‘if you judge a fish by its ability to climb a tree, it will live its whole life believing that it is stupid!’ எனும் ஐன்ஸ்டினின் கூற்றும் aphorism தான்.

பின்நவீனத்துவ இலக்கியங்கள் வளர்ந்த லத்தீன் அமெரிக்காவிலும் இன்று அஃபோரிசம் எழுதப்பட்டு வருகிறது. அதேவேளை நவீன இலக்கியவெளியில், அஃபோரிசத்திற்கான இடம் என்னவாக இருக்கிறது? என்றும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. சமகால அமெரிக்க அறிவியக்கத்தின் Dark Lady என்றழைக்கப்படும் மறைந்த சூசன் சொன்டாக் (Susan Sontag) அஃபோரிசத்தை, பிரபுத்துவ சிந்தனையின் அடையாளமாகப் பார்க்கிறார். அஃபோரிஸ்ட்டுகள் வாசகர்களை தங்களுக்கு சமமானவர்களாகப் பார்க்கவில்லை.
பொன்மொழிகள் . ‘ The aphorism talks to you as if you were an idiot ‘ என்கிறார் பேட்டர்சன். ‘There is nothing more difficult to define than an aphorism’ எனக்கூறுகிறார் உம்பெர்டோ ஈகோ. வாசகர்களின் நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல், உலகளாவிய பொது உண்மையைக்கூறி, வாசகர்கள் அஃபோரிசத்தை நம்பவேண்டும் என எதிர்பார்ப்பதாக W.H. ஆடன் குறிப்பிடுகிறார்.
‘ஆசிரியர் இறந்துவிட்டார்’ என நம்பும் காலத்தில் அஃபோரிசம் பொருந்துமா? என்கிற ஒரு சிக்கலான கேள்வியைதாம் இவர்கள் வெவ்வேறு வடிவத்தில் கேட்கிறார்கள். உலகில் ஒவ்வொரு குழுவுக்கும், உண்மைகள், நீதிகள், அறங்கள் வெவ்வேறாக இருக்கின்றன. ஆனால், அஃபோரிசங்களோ மூடுண்டவைகளாக இருக்கின்றன. அஃபோரிசத்தில், வாசகர்கள் தமக்கான திறப்பை கண்டடைவதில் சோர்வடைவதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
நல்வாய்ப்பாக பூவிதழின் அஃபோரிசத்தில் இத்தகைய மூடுண்ட தன்மை இல்லை. ஒற்றை அர்த்தம் செயல்படுவதும் இல்லை. இறுதி அர்த்தங்கள் கொண்டவையாக இல்லை.
பூவிதழ் உமேஷ் அஃபோரிஸத்தை முற்றிலுமாக நவீனத் தன்மையோடு கையாள்கிறார். அவற்றில் இயங்குகிற அரசியல் நிச்சயம் பிரபுத்துவத்துவ அரசியலாக இல்லை.

‘என் நாடு அற்புதங்களின்
தொட்டில்
அதில் புல்டோசராகளை நீங்கள்
நிறுத்திய பிறகு
மறைந்திருக்கும் சரஸ்வதி
நதி அழுகிறது’

இந்தக் கவிதை எக்காலத்துக்கும், எல்லா நிலத்துக்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறது. இயற்கையை அழிக்கிற அரசியல். எளிய மனிதர்களின் வாழ்விடங்களைக் கைப்பற்றுகிற, ஆக்ரமிக்கிற அரசியல், என விரிவடைந்தபடி இருக்கிறது.
இது ஒரு நீதிமொழியாக இல்லை.
தன்னளவில் இது ஓர் உருவகமாக அணுகுபவர்களின் உளவிரிவுக்கேற்ப அனுபவங்களை வழங்கக் கூடிய கவிதையாக இருக்கிறது. உமேஷின் இன்னொரு கவிதை.

‘என்னுடைய சொந்த வாழ்க்கையின்
பார்வையாளராக நான் இருப்பதால்
எனக்கு பொழுதுபோக்குக்குப் பஞ்சமில்லை’

இதைப் படிக்கும்போது ஷேக்ஸ்பியரின் As you like it நாடகத்தின் புகழ்பெற்ற வரிகள்தாம் ஞாபகத்துக்கு வருகிறது. இந்த உலகை, ஒரு நாடக மேடையாகப் பார்க்கிறார ஷேக்ஸ்பியர். இங்கு ஆண்கள் , பெண்கள் அனைவரும் நடிகர்களே. வெளியேறவும், உள் நுழையவும் அவர்கள் வாயில்களைக் கொண்டுள்ளனர். உலக வாழ்வை ஓர் உண்மையாகப் பார்க்காமல், அதை ஒரு நாடகமாகப் பார்க்கிற பார்வை முக்கியமானது. இந்த வாழ்வு உண்மைகளால் மட்டும் ஆனதல்ல. அபத்தங்களாலும் ஆனது. இது தரும் அனுபவங்களுக்காக மகிழவோ அழவோ தேவையில்லை. சினிமாவில், நாடகத்தில், துன்பியலும் ஒரு காட்சி அனுபவமே. பொழுது போக்கே. இதைப் பெருவாழ்வு என துதிக்காமல், பொழுதுபோக்கு எனக் கடந்து செல்கிற நிலைதான், இதை ஒரு பொன்மொழியாக ஆக்காமல் நவீனத் தன்மையுடைய கவிதையாகவும் மாற்றுகிறது.
‘துக்கத்தைப்போல
எதுவும் நெருக்கமாக இருப்பதில்லை.
எனவே துக்கத்தைப்போல
என்னிடம் நெருக்கமாக இருங்கள்’
என்று எழுதும் பூவிதழ் உமேஷ். இப்படி நிறைய ஆச்சிரியப்படுத்துகிறார்.
மனிதர்களின் விசேட குணமே துக்கம்தான். ஒரு காடு துக்கமாக இருப்பதில்லை. ஒரு ஆடு துக்கமாக இருப்பதில்லை. துக்கம்தான் மனித இருப்பு. சுயமுனைப்புதான் மனிதர்களைத் துக்கமாக உணரவைக்கிறது. துக்கமானவர்களிடம் மனிதர்கள் ஆறுதலாக நடந்து கொள்கிறார்கள். பரிவு காட்டுவார்கள். மதங்களின் புனிதநூல்கள் அனைத்தும் துக்கமான மனிதர்களுக்காக எழுதப்பட்டவைதாம். வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களை எதிர்நோக்கிதான் தன் இரு கைகளையும் விரித்து காத்திருந்தார் ஏசுநாதர். துக்கம்போல என்னோடு இணைந்திருங்கள் என்கிறாரே உமேஷ், இது ஒருவித மீ இறையியல் அணுகல். யோசித்துப்பாருங்கள். துக்கமாக இருக்கும்போதுதான் மனிதர்கள் மிகவும் இணக்கமாக இருக்கிறார்கள்.
அஃபோரிசத்தை ஞானமொழி என மொழிபெயர்ப்பது எவ்வளவு பொருளுடையதாக இருக்கிறது. அறிவுக்கும் ஞானத்துக்குமிடையே தூரம் அதிகம்.
அறிவாளி என்பவர் வெறும் பயோ கம்ப்யூட்டர்தான். ஞானம் இன்னும் உயர்ந்தநிலை. இக்கவிதைகள் எவ்வகையில் ஞான மணிகளாக உயர்ந்திருக்கின்றன ?
உமேஷின் ஒரு அஃபோரிசம்,
‘இருளைவிட
வெளிச்சத்தை நாம் அதிகம்
விரும்புவது என்பது
முன்பே இருக்கும் நாக்கைவிட
பிறகு முளைத்த பற்களை
விரும்புவது போன்றது
இந்தக் கவிதையைப் படிக்கும்போது ஜலாலுதீன் ரூமிதான் இம்முறை தமிழகத்தில் வந்து பிறந்துவிட்டாரோ எனத் திகைத்தேன். சிறிய வாக்கியங்களுக்கிடையே எவ்வளவு செறிவு! எல்லாவற்றையும் புரிந்துகொள்ள விரும்புவது அறிவது. எல்லாவற்றையும் அனுபவிப்பது ஞானம்.
இக்கவிதை ஞானத்தின் விளைச்சல்.
புத்தர் சொல்லும்போது அது ஞானத்தின் சொல். சீடர்களிடம் சென்றடையும்போது அது அறிவின் சொல்லாகிறது.
சராசரி மனம் அறிவை விரும்புகிறது. ஞானத் தேடலுக்கு no mind எனும் வெளியை உருவாக்க வேண்டியிருக்கிறது. நூலகத்தால் உங்களை அறிவாளியாக்கதான் முடியும். ஞானியாக்க முடியாது. ஞானம் என்பது இருப்பின் நிலை. நமது இருப்பின் நிலையை உணரவைப்பதற்கான ஒளியை தன் சொற்களின் வழி உருவாக்குகிறார் உமேஷ்.
‘அன்றாட வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் சிறிய விஷயங்களைக் கண்டுபிடிப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்’ என்கிறார் பாவ்லோ கோய்லோ.
‘நம் கால்கள் ஒவ்வொரு
பாதையிலும் செல்ல
முடியாது
ஆனால் ஒவ்வொரு பாதையும்
நம் கால்கள் இருக்கும்
இடத்தில்
ஏதோ ஒரு வகையில்
இணைக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கவிதை எவ்வளவு சிறியதாக இருகிறது. ஒரு நெடிய வாழ்வை வாழ்ந்து முடித்த மனிதனைத் தனக்குள் மூடி வைத்திருக்கும் மம்மியைப்போல.
உமேஷின் அஃபோரிசக் கவிதைகள் பார்க்க சிறியவைப் போல தோற்றம் தருவது ஒருவித மயக்கம். மேலும் வின்சென்ட் வான்கோ சொல்வதையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. ‘சிறிய விசயங்களால் இணைக்கப்பட்ட தொடரால் செய்யப்படுபவைதான் பெரிய விசயங்கள்.’ இந்தக் கவிதைகள் அதைத் தான் செய்கின்றன.
உமேஷ் கவிதைகள் நம்மை வாழ்வின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு அழைத்துச் செல்கிற வேலையை சத்தமில்லாமல் செய்கின்றன. ஒரு வரியில் உள்ள ஒரு கவிதையைப் பாருங்கள்,
“ஆறுதலாக பேசுவது உலகின் பழமையான மருத்துவமுறை”.
மிக இளம் வயதில் இத்தகு கவிஞானத்தை உமேஷிடம் கண்டு திகைக்கிறேன். திரும்பத் திரும்ப முக்கியமில்லாத வேலைகளை செய்வதின் சோர்விலிருந்து தப்பிக்கும் உபாயத்தை உமேஷ் அறிந்திருக்கிறார். படைப்பதுதான் விரக்தியிலிருந்து வெளியே வருவதற்கான உபாயம். உமேஷ் வெளியே வருகிறார். நம்மையும் வெளியேற்றுகிறார். இவர் கவிதைகள் ஒரு தியானம் போல் இருக்கின்றன. நம் மனதின் அமைதியான இடங்களில், சிறிய சொற்களை வெடிக்க வைத்து, கடவுளின் இருப்பை அனுபவிக்கிற பரவசத்தைத் தருகிறார் . ‘தண்ணீரின் சிரிப்பு’ தொகுப்பின் மூலம் தமிழுக்கு ஒரு புதிய வடிவத்தைத் அளித்திருக்கிறார் ,
‘உங்கள் இதயம் எனக்கு ஒரு பள்ளத்தாக்கு’ எனக்கூறும் பூவிதழ் . உமேஷை நிரப்பிக் கொள்வோம்.


தண்ணீரின் சிரிப்பு – சரவணன் மாணிக்கவாசகம்

ஆசிரியர் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் நவலை என்ற சிற்றூரில் பிறந்தவர். அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். மொழிபெயர்ப்பு உட்பட ஆறுநூல்கள், சிறார் நூல்கள் பன்னிரண்டு முதலியன ஏற்கனவே வெளிவந்த இவரது நூல்கள். இது கவிதைத் தொகுப்பு.

Aphorism என்றால் தமிழில் பொன்மொழி என்பதே அதிகம் பொருந்தும் என்பது என் கருத்து. தமிழின் முதல் aphorisa நூல் என்ற முன்னுரையைத் தாங்கி வந்திருக்கும் நூலிது.

கவிதைக்கழகு மேற்கொண்டு செல்ல விடாது கண்களைக் கவ்விக் கொள்ளுதல். அது இந்தத் தொகுப்பில் அங்கங்கே நிகழ்கிறது.

உண்மையை அழகியல் சரிகையில் அலங்கரித்துக் காட்டுவது அஃபோரிசம்.
அதற்கு நல்ல உதாரணம் இந்தக் கவிதை:

இலையுதிர் காலத்தில் கடல்
எந்த இலையையும் உதிர்ப்பதில்லை
ஆனால் உப்பளம் எங்கும்
கடலின் சருகுகள்”

எது வசதியாக இருக்கிறதோ அதை விரும்புவதே மனிதசுபாவம். ஒளிக்க வேண்டியதற்கு இருளையும், பரப்ப வேண்டியதற்கு வெளிச்சத்தையும் அவ்வப்போது தேடுவதென்பது சுயநலம் தானே!

இருளை விட வெளிச்சத்தை
நாம் அதிகம் விரும்புவது
முன்பே இருக்கும் நாக்கை விட பிறகு
முளைத்த பற்களை விரும்புவது போன்றது”

உறவுகள் நேரத்தை கேட்பவை. நேரத்தை செலவுசெய்ய முடியாவிட்டால் நிறம்மாறும் உறவுகள். காலம் எல்லா உறவையும் தேய்த்துப் பரிசோதிக்கும் உரைகல்.

” காலடித்தடங்கள் குறையும் போது
ஒற்றையடிப் பாதைகள் மறையத்
தொடங்குகின்றன
உறவுகளும் அப்படித்தான்”

“whatever our souls are made of, his and mine are the same”. Wuthering Heights நாவலின் ஒரு Quoteஇது. நாவலை வாசித்தவர்கள் இந்த வரியை மறக்கவே முடியாது, இருவரின் உறவை இது தெளிவாகச் சொல்கிறது. அஃபோரிஸமும் கூட உண்மையை உரக்கச் சொல்ல உபயோகப்படுத்துவது.

246 கவிதைகள் அடங்கிய தொகுப்பில் அஃபோரிச வடிவத்தை உபயோகித்துத் தேறியவைகள் மிகக் குறைந்த சதவீதமே. ஒரு வடிவமோ அல்லது சித்தாந்தமோ ஒருவரின் கற்பனைக்குதிரையை லகானிடும் ஆபத்து உமேஷூக்கு மட்டுமல்ல, எல்லாக் கவிஞர்களுக்கும் உள்ளதே. அதிகம் பிடித்தவர்கள் நூறுபேரைச் சொல்லச் சொன்னால் ஐம்பது பேருக்குப்பிறகு எண்ணிக்கைக்காகத் தையல்காரரை சேர்க்கலாமா என்று யோசிப்போம். கவிதைகள் சிலவற்றைக் களையெடுத்திருக்கலாம். இருந்த போதிலும் புதியமுயற்சிக்கும், ஆர்வத்திற்கும் பாராட்டுகள்.

சரவணன் மாணிக்கவாசகம் – தமிழின் மிக முக்கியமான விமர்சகர். அச்சு இணைய ஊடகங்களில் தொடர்ந்து விமர்சனங்களையும் அறிமுகங்களையும் எழுதி வருகிறார் அவருடைய வலைப்பக்கத்தில் நூற்றுக் கணக்கான நூல்கள் பற்றி காணக்கிடைக்கின்றன. படித்துப் பயன் பெற அந்த இணைப்பைக் கீழே கொடுத்துள்ளேன்.

பிரதிக்கு:

எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஜனவரி 2024
விலை ரூ. 150.

தண்ணீரின் சிரிப்பு – நீதி மணி

இப்போது வரும் அலை முன்பு வந்து சென்ற அலை இல்லை என்பது பூவிதழ் உமேஷ் -க்கு பொருந்தும்.

அவருடைய வெயில் ஒளிந்துக்கொள்ளும் அழகி, துரிஞ்சி,சதுரமான மூக்கு…ஒவ்வொன்றும் ஒரு மொழிதல் முறையை கொண்டவை.

அவரைப்போலவே மிக நிதானமாக பேசக்கூடியவை.

தன் முயற்சியில் சற்றும் தளராத வேதாளம் இப்போது “அஃபோரிச கவிதைகளுடன்” வந்திருக்கிறார்.

ஒரு கவிதை:

“நம் கால்கள் ஒவ்வொரு
பாதையிலும் செல்ல
முடியாது
ஆனால் ஒவ்வொரு பாதையும்
நம் கால்கள் இருக்கும்
இடத்தில்
ஏதோ ஒரு வகையில்
இணைக்கப்பட்டிருக்கிறது.”

இந்த தொகுப்பை படித்த போது இரண்டு எண்ணங்கள் தோன்றின.

ஒன்று, நாமும் இந்த வகைமையில் எழுதவேண்டும்.

இரண்டு, நம்முடைய ஒரு நூலுக்காவது  Karikalan R பங்காளியிடம் ஒரு அணிந்துரை வாங்கிடவேண்டும்.

இந்த கவிதைகளுக்கு  அருமையான ஒரு அணிந்துரையை அவர் அளித்துள்ளார்.

தம்பி உமேஷ்க்கு ஒரு வேண்டுகோள்.

நான் 246-கவிதைகளுக்கு பணம் கொடுத்து இந்த நூலை வாங்கியிருக்கிறேன்.

ஆனால்,60-ஆவது கவிதையே 244-ஆவது கவிதையாகவும் வந்துள்ளது.

அதனால் ஒரு கவிதை குறைகிறது.

இன்னொரு அஃகோரிச கவிதை எழுதி அனுப்பி இழப்பை ஈடுசெய்யுங்க.

எழுத்தாளர் நீதி மணி அவர்கள் கதைகள் பாடல்கள் கவிதைகள் என பல தளங்களில் பயணிப்பவர்.

தண்ணீரின் சிரிப்பு- சோலைமாயவன்

~தமிழில் முதல் அஃபோரிச கவிதை நூல் எழுதி கவிதையில் புதிய வழித்தடத்தை உருவாக்கி வரும் கவிஞர் பூவிதழ் உமேஷ்க்கு வாழ்த்துகள் ~இவரின் துரிஞ்சி கவிதைத் தொகுப்பு சிறப்பானவை என்றாலும் அதை உள்வாங்குவதற்குக் கூடுதலாக மெனக்கிட்டேன் ~ஆனால் தண்ணீர் சிரிப்பு கவிதைத் தொகுப்பில் எளிமை எளிமை தண்ணீர் போல் அதுபோல் அடர்த்தி அடர்த்தி தண்ணீர் போல் ~கரிகாலன் சார் எழுதிய அணிந்துரைக்குள் போகாமல் கவிதையை வாசிக்கத் தொடங்கிவிட்டேன்

246 கவிதைகளை எழுத்தியிருக்கிறார்
246 முறை என் இதயம்புன்னகைத்துக்கொண்டது ~ஒவ்வொரு கவிதைக்குள் ஆச்சரியம் அடர்த்தியும் செறிவாக பொருத்திருக்கிறார்

“அன்பும் சிகரெட்டும் சமமாக ஆபத்தானவை
என்பது அனைவருக்கும் தெரியும்
ஆனால்
சிலர்தான் அதை கைவிட
விரும்புகிறார்கள்
அதிலும் சிகரெட்டை கைவிடுபவர்கள் சிலரே” ~காலில் முள் குத்தியது போல் அன்பு இல்லாமல் கைவிடப்பட்டவரின் வலியை எழுதுகிறார் இந்தக் கவிதை வரி உருவாக்கும் சித்திரம் உலகெங்கும் காட்சியாக தெரியும் சின்ன நகரங்கள்கூடபிள்ளைகளால் கைவிடப்பட பெற்றோர்களைப் பார்க்கிறோம் பெருநகரங்களை கணக்கெடுத்தால் இந்தக் கவிதை வரி தரும் வலி அறிவோம்

“எங்கும் செல்கிறோம் என்று தெரியாதபோது
ஏன் வேகமாக ஓட வேண்டும்
இந்தக் கேள்வியை எல்லோர் கையிலும் பரிசாக கொடுத்துவிட்டால்
உலக பாதி அமையாதிவிடும்”
~ மும்பை சென்னை போன்ற நகரங்களில் தான் மக்கள் அவசர அவசரமாக ஓடிக்கொண்டேயிருப்பார்கள் என்ற கருத்து பொய்யாகி போனது நவீன தொழில்நுட்பம் வாஸ்துகள் வீட்டிற்குள் நுழைந்த பின் கிராம்ம் நகரம் எதையும் விட்டுவைக்கவில்லை எல்லோரையும் பேய் போல் பிடித்து ஆட்டுகிறது அவசரம்
“ஒரு பன்னாட்டு நிறுவனம்
வேறு எந்த உறுப்புக்குப் பதிலாகவும்
உடலெங்கும்
கோரைப் பற்களை மட்டுமே கொண்ட காட்டு விலங்கு”
~ அஃபோரிசம் என்றால் என்ன எதுவும் அறிந்திடாமல் கவிதைகளை வாசிக்க தொடங்கினேன் ஆனால் மதிக்கெட்டான் சோலைக்குள் நுழைந்தவனின் போல் தொகுப்பை வாசித்துவிட்டு கீழே வைத்தேன்

கடைசியாக கவிஞர் கரிகாலன் சார் அணிந்துரை வாசித்தேன் அஃபோரிசம் என்பதை என்ன ஆரம்பித்து ஒரு ஆய்வுக்கட்டுரையே எழுதிவிட்டார்
மறுமுறை உமேஷ் கவிதைகளை வாசித்துப் பார்கிறேன் பிரமாண்டமாக தெரிகிறது
கவிஞர் கரிகாலன் சார்” உமேஷ் கவிதைகள் ஒரு தியானம் போல் இருக்கின்றன நம் மனதின் அமைதியான இடங்களில் சிறிய சொற்களை வெடிக்க வைத்து கடவுளின் இருப்பை அனுபவிக்கிற பரவசத்தைத் தருகிறார் என்கிற அவரின் வாழ்த்தை வழிமொழிகிறேன்

வாழ்த்துகள் தோழர் பூவிதழ் உமேஷ்

அன்புடன்
சோலைமாயவன்

கவிஞர் -சோலை மாயவனின் சமீபத்ய கவிதை நூல்

மகாத்மா காந்திக்கு ஒரு கவிதை

Lexotan 12 ம்~ காந்தியாரும்

மனநல மருத்துவர் என்னிடம் கேட்டார்:

உங்கள் மூளையில் இருக்கும் அனைத்தையும் சொல்லுங்கள்.

நான் கஷ்டப்பட்டேன்~

நான் அமைதியாக இருந்தேன்.

அவர் மீண்டும் கேட்டார்:

நீங்கள் இப்போது என்ன நினைக்கிறீர்?

பிரதமரின் உடை அலங்காரத்தை நினைத்துக் கொண்டிருக்கும் போது

திடீரென காந்தியிடமிருந்த

காகா கலேல்கரின் கைத்தடி ஞாபகம் வந்தது

அமைதியாக இருந்தேன்

அடுத்து கேட்டார்:

எதைப் பற்றி கவலைப்படுகிறீர்?

இந்திய நகரங்களின் பழைய பெயர்களுக்கும் எனக்குமான தூரம் குறித்து கவலைப்படுகிறேன் என்பதை மறைத்தேன்

இரண்டு நதிகளுக்கு இடையேயான குறைந்த தூரம் கண்ணீர் வழியும் இரு விழிகளுக்கு இடையேயானது என்றேன்.

அவர் உத்திரபிரதேசத்தில் வீடுகளை இடித்த JCB போல மூச்சு விட்டார்.

எனக்குக் குழப்பமாக இருந்தது.

கண்களை மூடும் போது உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவரை ஒருவேளை கண்டுபிடிக்கலாம் என்றார்.

கண்களை மூடினேன்

கல்கத்தாவின் ஒரு தெருவில்

காந்தியின் ஒரு துளி கண்ணீர் உலர்ந்த ஓர் இலையின் மீது விழுந்தது**

மருத்துவர் சொன்னார்:

இந்த ஆண்டிலும் நம்மால் எதுவும் செய்ய முடியாத இரண்டு நாட்கள் உள்ளன:

நேற்று மற்றும் நாளை*

காந்தியின் குரல் அவருக்கு எப்படி வந்தது?

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது

தெளிவு மெல்ல கூடியது

காந்தி ஒரு பாதி மனநல மருத்துவர் என்று

கண் விழித்து நிமிர்ந்தேன்.

எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே வாழ்க்கை இருக்கிறது* என்று எழுதிய

சுவர் நாட்காட்டி தொங்கியது

மருத்துவர் தந்த

மருந்து சீட்டைப் பார்த்தேன்

Tab -Lexotan 12

காந்தி என்று எழுதி இருந்தது.

******

*****

*  காந்தியடிகள் எழுதியவை

** 14.8.1947 அன்று நவகாளி யாத்திரையில் நடந்தது.

மன நல மருத்துவர்

ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழா



இந்திய மொழிகளுக்கான கொண்டாட்டமாகத் கருதப்படும் ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழா கடந்த வியாழன் அன்று  நோபல் விருது பெற்ற எழுத்தாளர் அப்துல் ரசாக் குரானா அவர்களின்  தொடக்க உரையுடன் தொடங்கியது. எதிர்ப்பின் ஒரு வடிவமாக எழுதுதல் என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.
அதில் எழுதுவது என்பது மறதி, கவனச்சிதறல், புறக்கணிப்பு, நமக்குத் தெரிந்ததையும், நாம் நினைவில் வைத்திருப்பதையும் கடந்துபோக வைப்பதற்கான எதிர்ப்பின் வடிவமாக இருக்கிறது என்று அவர் பேசியுள்ளார்.

இவ்விழாவில் 21 இந்திய  மற்றும் 14 சர்வதேச மொழிகளைச் சேர்ந்த 350 எழுத்தாளர்களும் கவிஞர்களும் பங்கு கொண்டு ஐந்து அமர்வுகளில் உரை நிகழ்த்துகிறார்கள். 

நாளை மறுநாள் ஜனவரி 23ஆம் தேதி இந்த இலக்கியத் திருவிழா நிறைவு பெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற கவிஞருக்கு வழங்கப்படும் கவிதைக்கான மகாகவி கண்ணையாலால் சேத்தியா விருது இந்த ஆண்டு  மலையாள கவிஞர் கே.சச்சிதானந்தன் அவர்கள் பெறுகிறார். மலையாளத்திலிருந்து அவருடைய கவிதைகளும் தமிழில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மனித ராசியின் தாய்மொழி கவிதை. அது மொழிகளுக்கு அப்பாலிருக்கும் மொழி. அது எல்லோருக்கும் சொந்தமானதுதான். மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும்கூட என்று சொல்லவே விரும்புகிறேன். ஏனெனில், கவிதையினூடாகப் பேசுவது மனிதர்கள் மட்டுமல்ல. அசைவதும் அசையாததுமான பிரபஞ்சம் முழுவதும்தான்.

– சச்சிதானந்தன்

அவருடைய   இரண்டு கவிதைகள்.

தமிழில் சுகுமாரன்

நினைவில் காடுள்ள மிருகம்

“நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதாகப் பழக்க முடியாது.
அதன் தோலில் காட்டுச் சதுப்பு நிலங்களின் குளிர்ச்சி.
அதன் மயிர்க்கால்களில் காட்டுப்பூக்களின் உக்கிரவாசனை.
அதன் கண்மணிகளில் பாறைகளில் வழுக்கிவிழும் காட்டுச் சூரியன்.
அதன் வாயில் காட்டாறுகள் கர்ஜிக்கின்றன.
அதன் நாவில் காட்டுத்தேன் எரிகின்றது.
அதன் செவிகளில் அடவிகளின் மேகங்கள் முழங்குகின்றன. அதன் இரத்தத்தில் காட்டானைகள் பிளிறுகின்றன.
அதன் இதயத்தில் காட்டு நிலாக்கள் பூக்கின்றன.
அதன் சிந்தனைகள் காட்டுப்
பாதைகளில் குதித்தோடுகின்றன.
நினைவில் காடுள்ள மிருகத்தை
எளிதாகப் பழக்க முடியாது.
என் நினைவில் காடுகள் உள்ளன”

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
கரியும் எண்ணெய்ப் பிசுக்கும் கலந்த அவளது பகலை
சொர்க்கத்து மகரந்தம் சுவாசிக்கின்ற
வானம்பாடியாக மாற்றுவது,
இரவில் அத்தளர்ந்த சிறகுகளுக்கு ஓய்வு தர
தோள் குனிந்து கொடுக்கும்
தளிர் அடர் மரமாக மாறுவதாகும்.

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
காற்றும் மழையும் நிறைந்த கடலில்
மேகங்களின் கீழே புதியதோர் பூமியைத் தேடி
காலம் செலுத்துதல் என்று பொருள்.
நமக்குச் சொந்தமான வீட்டு வாசலில்
முளைத்த ஒரு மலர்ச்செடியை
யாரும் இதுவரை கண்டிராத கடற்கரையில்
கொண்டுபோய் நட்டுவளர்த்தல் என்று பொருள்.

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
தன் தசைநார்களின் ஆற்றல் முழுவதையும்
ஒரு சௌகந்திகப் பூவின் மென்மைக்குக்
கைமாற்றம் செய்து கொள்வதாகும்.
மணிமுடியும் ராணுவ உடையும் கழற்றியெறிந்து
மற்றொரு வானம் கடந்து
மற்றொரு வீட்டிலுள்ள
காற்றிற்கும், மற்றொரு நீருக்கும்
தன் தசையை விட்டுக்கொடுப்பதாகும்.

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
அவளுடைய பழமையான காயங்களிலிருந்து
சூரிய கிரணம் போல் ஒரு வாளை உருவாக்க
அவளுக்கு உதவுவதாகும்.
பின்னர் இரத்தம் வடிந்து தீரும் வரை
அக்காயத்தில் நம் இதயத்தை அழுத்திக் கிடப்பதாகும்.
நான் ஒரு பெண்ணையும் காதலித்ததில்லை.